அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
நவம்பர் 21, 2009 அன்று அம்பிகா கோபாலனின் 'பாரதியாரின் புதுமைப் பெண்' எனும் நாட்டிய நிகழ்ச்சி சான் ஹோசே CET மையத்தில் நடந்தது. இவர் விஷ்வசாந்தி நாட்டிய அகாடமித் தலைவி ஸ்ரீலதா சுரேஷின் மாணவி ஆவார். விரிகுடாப் பகுதியிலுள்ள Asian Women's Home, Maitri ஆகிய இரு வீட்டுவன்முறைச் சரணாலயங்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி புஷ்பாஞ்சலி, இறைவந்தனம் குரு வந்தனம், சரஸ்வதி துதியுடன் ஆரம்பித்தது.

தொடர்ந்த ஆஷா ரமேஷின் பாடலுக்கு அம்பிகா, கணபதியிடம் கேட்கும் வரம் தரும்படிக் கெஞ்சி ஆடியது மிக உருக்கம். அடுத்து பாரதியின் கருத்துக்களை மையமாகக் கொண்டு ஆஷா ரமேஷ் இயற்றிய 'புதுமைப் பெண்' பாடலை அசோக் சுப்ரமண்யம் ராகமாலிகையில் பாடிய விதம் சிறப்பு. பெண்ணின் கனவு, தன்னம்பிக்கை, நிமிர்ந்த நடை, பெண் அறத்தை உதயகன்னி உரைப்பதைக் கேட்பீரோ, துன்பம் தீர்வது பெண்ணாலே, அமைதியாலே ஆடுவோம் ஆகிய இடங்களில் அவர் அபிநயித்தது அருமை. அசோக், ஆஷா இயற்றிய பாஞ்சாலி சபதம் பாடலை ராகமாலிகை, தாளமாலிகையில் வழங்கியது செவிக்கு அமுதம். இதற்கு சோகம், வீரம், கோபம் ஆகிய ரசங்கள் கொப்பளிக்க அம்பிகா ஆடிய விதம் சபையினரின் பாராட்டைப் பெற்றது.

பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' பாடலின் சித்திரிப்பு சிறப்பாக இருந்தது. ஆஷா ரமேஷ் (குரலிசை), சாந்தி நாராயணன் (வயலின்), நாராயணன் (மிருதங்கம்) என அனைத்துமே நிகழ்ச்சிக்கு வலுவூட்டின. இறுதியாக அசோக் சுப்ரமண்யத்தின் ஜோன்புரி ராக தில்லானாவில் விறுவிறுவென்று வேக நடையுடன் 'எண்ணியது முடிதல் வேண்டும்' என்று அன்னையை வேண்டித் துதித்தது கண்ணுக்கு விருந்து. நேர்த்தியாக நடன வடிவமைத்து அம்பிகாவைச் சிறப்பாக ஆடச் செய்த பெருமை குரு ஸ்ரீலதா சுரேஷ் அவர்களையே சாரும்.

சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com