மகேஷ் பூபதி
பத்து கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள், இரட்டையர் ஆட்டங்களில் முப்பத்தேழு கோப்பைகள், நான்கு கிராண்ட் ஸ்லாம் களிலும் வென்ற சிறப்பு, அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் இவை போதாததற்குத் தொழிலதிபர் வேறு -

இரண்டு மூன்றெழுத்துக்காரரான - மகேஷ் பூபதியின் சாதனைப் பட்டியல்தான் இது. சென்னையில் பிறந்து, துபாயில் வளர்ந்து, மிஸ்ஸிஸிப்பி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, பெங்களூரில் வசிக்கும் தமிழரான மகேஷ்

ஸ்ரீனிவாஸ் பூபதி டென்னிஸ் உலகில் அமைதியாகப் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

இண்டியன் வெல்ஸ் நகரில் (கலி·போர்னியா) சென்ற மாதம் நடந்த பசி·பிக் லை·ப் ஓப்பனில் சானியா மிர்ஸாவின் ஆட்டத் தைக் காண வந்திருந்த மகேஷ் பூபதியோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. "கமான் சானியா,

வெல் டன்" என்று அவரை ஊக்குவித்தவாறே ஆட்டத்திற்கு நடுவில் நமது கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார் மகேஷ். கேள்விகளுக்கு நறுக்கென்று பதில்கள் வருகின்றன.

ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பனில் மார்டினா ஹிங்கிஸ்ஸ¤டன் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றிய சாதனையைப் பாராட்டிய பின் "சானியா மிர்ஸாவின் டென்னிஸ் விளை யாட்டிற்கு

நீங்கள் எப்படி உதவுகிறீர்கள்?" என்று ஆரம்பிக்கிறோம். "சானியாவின் டென்னிஸ் விளையாட்டுடன் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. எனது நிறுவனம் அவரது விளையாட்டுச் சம்பந்தமான தேவைகளை நிர்வகித்து

வருகிறது. நானும் அவர் விளையாடும் அதே தொடரில் இருந்தால் அவர் விளையாடுவதை விரும்பிப் பார்ப்பதுண்டு. அவருக்கு அவ்வப்போது சிறிய அறிவுரைகள் மட்டும் கூறுவது உண்டு" என்கிறார். அவரது தந்தை கிருஷ்ண

பூபதி பெங்களூரில் டென்னிஸ் வில்லேஜ் என்ற பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறார். "உங்கள் தந்தை சானியாவின் பயிற்சியாளரா?" என்று எங்கோ இணை யத்தில் படித்ததை உறுதி செய்துகொள்ளக் கேட்கிறோம். "இரண்டு

வருடங்கள் அவருக்குப் பயிற்சி அளித்தார். ஆனால் இப்போது இல்லை" என்று கூறுகிறார்.

"உங்கள் நிறுவனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?" என்றோம். "நிச்சயம். Globosport என்று பெயர். மூன்று வருடங் களுக்கு முன்னால் துவங்கினோம். கடவுளின் அருளால் நன்றாக வளர்ந்திருக்கிறது. நாங்கள் சானியா,

நாராயண் கார்த்திகேயன் போன்ற விளையாட்டு வீரர்களின் தேவை களை நிர்வாகம் செய்கிறோம். பாலிவுட் நடிகர்கள் பலரும் எங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இருக்கிறார்கள். டென்னிஸ், கோல்·ப் போன்ற விளையாட்டு

நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்கிறோம். விவரங்களை www.globosportworld.com வலைத்தளத்தில் பார்க்கலாம்" என்கிறார்.

"டென்னிஸில் வேறு என்ன சாதிக்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்திருக் கிறீர்கள்?" என்று தொடருகிறோம். "குறிக்கோள் எதுவும் வைத்துக் கொள்வ தில்லை. கடினமாக உழைக்கிறேன். டென்னிஸில் முழு

கவனத்தையும் செலுத்து கிறேன். சாதகமான முடிவுகள் தாமாகவே வந்து சேரும் என்று நம்புகிறேன்" என்கிறார் உறுதியாக.

"டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தைப் பிரபலப்படுத்த வழி என்ன?" என்று ஆவலுடன் கேட்கிறோம். "அதைப் பற்றி யோசித்ததில்லை. அது என்னுடைய வேலையும் இல்லை. அது ATP-ன் வேலை. அவர்கள் இந்த

ஆண்டிலிருந்து சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவை பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று சாதுரியமாகப் பதிலளிக்கிறார். "இரட்டையர் ஆட்டத்திற்கான புதிய விதிமுறைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்

களா?" என்று நாம் தொடர, "அது மட்டுமல்ல, அவர்கள் புதிதாக இரட்டையர் ஆட்டத்தைப் பிரபலமாக்க விளம்பரங்களை அதிகரித்திருக்கிறார்கள். அவற்றின் முக்கியத்துவத்தைக் கூட்டியிருக்கிறார்கள். அவைகள் பலனளிக்கும்

என்று நினைக்கிறேன்" என்கிறார்.

"ஜான் மக்கென்ரோ மீண்டும் விளையாட வந்ததைப் பற்றி...?" என்று தொடங்க, "அது நல்லது என்றே நினைக்கிறேன். அவர் புதிதாக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பலரும் அவர் விளையாடுவதைப் பார்க்க சான்

ஹோசேக்கு வந்தார்கள். ஆனால் அவர் முழு நேரமாக விளையாடப் போவ தில்லை போலத் தெரிகிறது. வருடத்தில் சில முறைகளாவது அவர் விளையாடுவதைப் பார்க்க நன்றாக இருக்கும்" என்று பதிலளிக்கிறார்.

"உங்கள் விளையாட்டு வாழ்க்கையில் மனதில் நின்ற அனுபவம் என்ன?" என வினவுகிறோம். "ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாம் வெற்றியும் சிறப்பானதுதான். ஆனால் விம்பிள்டனில் முதல்முறை வென்றது என் மனதில்

அழுத்தமாக நிற்கிறது" என்கிறார் புன்முறுவலோடு.

"டென்னிஸ் வீரர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?" என்று மேலும் துருவு கிறோம். "நான் வளரும் போது விஜய் அமிர்தராஜின் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. மேலும் நான் போரிஸ் பெக்கர் காலத்தில்

வளர்ந்தவன். அதனால் அவரும் எனக்குப் பிடித்த வீரர் என்று சொல்லலாம்" என்கிறார்.

இந்தியாவில் டென்னிஸின் எதிர் காலத்தைப் பற்றிக் கேட்டதற்கு, "சானியா நன்றாக விளையாடுவது ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல இளைஞர்கள் டென்னிஸ் விளையாட விரும்புகிறார்கள். அதனால் எதிர்காலம்

நன்றாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும் பல நல்ல இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்வதற்கான ஆதரவு கொடுத்து அவர்கள் திறமையை வெளிக் கொணர ஏற்பாடுகள்

செய்வோமானால் அடுத்த பத்து வருடங்களில் நிச்சயமாகப் பல வெற்றி வீரர்களை உருவாக்க முடியும். குறிப்பாக ஆண்களில் பிரகாஷ் அமிர்தராஜ், ரோஹன் போபன்னா, பெண்களில் ஷிகா உபராய், பாம்ப்ரி சகோதரிகள்

விரைவாக வளர்ந்து வரும் இளைஞர்கள்" என்கிறார்.

"டென்னிஸில் இளைஞர்கள் வெற்றிபெற என்ன தேவை?" என்று வெற்றியின் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் வலுடன் கேட்கிறோம். "அடிப்படையாக, வெற்றிபெற வேண்டும் என்ற உந்துதல் இருக்க வேண்டும். பிறகு

பயணம், விளையாட இடம், பயிற்சி போன்றவைகளுக்குத் தேவையான ஆதரவு கிடைக்க வேண்டும். இவற்றை அமைத்துக் கொடுப்பது இரண்டாம் பட்சம்தான். வாழ்க்கையில் சிறு வசதிகள், இன்பங்களை விட்டுக் கொடுத்து

வெற்றிபெற வேண்டும் என்ற உந்துதலோடு உழைக்கத் தயாராக இருக்கும் ஆர்வம்தான் மிக முக்கியம்" என்று பயனுள்ள அறிவுறையைப் பகிர்ந்து கொள்கிறார்.

மெல்ல அவரது சொந்த வாழ்க்கைக்குக் கவனத்தைத் திருப்புகிறோம். முதலாவதாக "டென்னிஸில் எப்படி ஆர்வம் வந்தது?" என்று ஆரம்பிக்கிறோம். "என் தந்தைக்கு டென்னிஸில் மிகுந்த ஆர்வம் உண்டு, நன்றாக

விளையாடுவார். என் மூன்றாவது வயதில் இருந்தே எனக்கு விளையாட வாய்ப்புச் செய்து கொடுத்தார்" என்று கூறுகிறார்.

"எனக்கு மூன்று வருடங்களுக்கு முன்னால் திருமணமாயிற்று. என் மனைவி சென்னையைச் சேர்ந்தவர். அவரும் என்னுடன் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்கிறார். எங்களுக்குக் குழந்தை இன்னும் இல்லை" என்று கூறிப்

புன்முறுவல் செய்கிறார். இவரது மனைவி ஸ்வேதா ஜெய்சங்கர் சென்னையில் மாடலாக பணியாற்றியவர். 1998-ல் மிஸ் இண்டர் நேஷனல் போட்டியிலும், இந்தியாவில் ·பெமினா பத்திரிகை நடத்தும் போட்டி களிலும்

அழகிப் போட்டிகளிலும் பரிசுகள் வென்றவர். திருமணத்திற்குப் பிறகு Globosport நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கெடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"பயணம் செய்யவேண்டி இருக்கிறதே. எப்படிக் குடும்பம், டென்னிஸ் இரண்டையும் சமாளிக்கிறீர்கள்?" என்று தொடருகிறோம். "நல்ல வேளை, இந்தியாவில் எனது நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் குழு மிகத்

திறமையானது. இணையம், செல்பேசி என்று தொழில்நுட்பம் பெருகிய இந்தக் காலத்தில் இது சுலபமாகி வருகிறது. ஆனாலும், கடினம்தான். டென்னிஸ் வாழ்க்கையை நான் மிகவும் ரசிக்கிறேன். அதனாலும் இது சுலபமாக

இருக்கிறது" என்கிறார்.

"உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு பற்றி கூறுங்களேன்" என்றதும், "எனது வெற்றியில் குடும்பத் தினருக்குப் பெரும் பங்கு உண்டு. நான் வளரும் போதும், கடினமான கால கட்டத்திலும் என்னுடைய தந்தை எனக்கு

விளையாடக் கற்றுக் கொடுத்தார். அம்மாவும், சகோதரியும் என்னுடைய டென்னிஸ¤க்காகப் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். என்னுடைய டென்னிஸ் விளையாட்டு மேம்படுவதற்கான வசதியைத் தேடிப் பல

ஊர்களுக்கு மாறிமாறிக் குடிசெல்ல வேண்டியிருந்தது. குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலைக்கு முன்னேறியிருக்க முடியாது" என்று நன்றி யுணர்வுடன் நினைவுகூர்கிறார்.

"விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வர எப்படி உங்களால் முடிகிறது?" என்று அதிசயித்துக் கேட்கிறோம். "நான் டென்னிஸ் விளையாட்டை மிகவும் விரும்புகிறேன். இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடிய

பின்னும் ஆர்வம் குறையாமல் இருப்பது கடினம்தான். போட்டியிடுவதை நான் மிகவும் விரும்பு கிறேன். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் போட்டியிடுவதை மிகவும் விருபுகிறேன். அதுவே எனது ஆர்வத்தைத் தொடரப்

போதுமானதாக இருக்கிறது" என்று யதார்த்தமாகப் பதிலளிக்கிறார்.

"டென்னிஸ் வாழ்க்கைக்குப் பிறகு..?" என்று கேள்வி தொடுக்கிறோம். "Globosport நன்றாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியில் மும்முரமாக ஈடுபடுவதுதான் என்னுடைய முதல் குறிக்கோள்" என்கிறார்.

"நீங்கள் மீண்டும் லியாண்டருடன் விளையாடுவீர்களா?" என்று அனைவர் மனத்திலும் தொக்கி நிற்கும் கேள்வியைக் கடைசியாகக் கேட்டே விடுகிறோம். "நாட்டுக்காக விளையாடும்போது நாங்கள் சேர்ந்துதான் ஆடுகிறோம்.

ஆசிய விளை யாட்டுகள், ஒலிம்பிக்ஸ், டேவிஸ் கப் ஆட்டங்களில் சேர்ந்து விளையாடுகிறோம். மற்றபடி எப்போது சேர்ந்து விளையாடு வோம் என்று தெரியாது. ஆனால் நாட்டுக் காக எப்போதுமே சேர்ந்துதான் ஆடுகிறோம்"

என்று புன்னகை மாறாமல் பதிலளிக்கிறார்.

நேரம் கிடைத்தால் கோல்·ப் விளையாடு வதாகச் சொல்கிறார். டென்னிஸ் மற்றும் தனது நிறுவனம் என்று முழுநேரமாக இரண்டு வேலைகளைச் செய்வதால் ஓய்வு அதிகம் இல்லை என்று கூறும் இவர், ஓய்வு நேரத்தைக்

குடும்பத்துடனும், நண்பர் களுடனும் செலவழிக்கப் பிடிக்கும் என்கிறார். கால்பந்து, கிரிக்கெட் போன்ற ஆட்டங் களையும் பார்க்கப் பிடிக்கும் என்று கூறும் இவர், "எல்லா கிரிக்கெட் வீரர்களையும் எனக்கு நன்றாகத் தெரியும்.

அவர்கள் எனக்கு நண்பர்கள் கூட" என்று சிரித்த வாறே கூறி, தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என யாரையும் தனிப்படக் கூற மறுத்துவிட்டார்.

தமிழ் சரளமாகப் பேசத் தெரியாது என்று சற்றே வெட்கத்துடன் ஒப்புக் கொள்ளும் இவர் அதிகமாகப் பார்ப்பது ஹிந்தி சினிமாக்கள். பிடித்த நடிகர் அமிதாப் பச்சன். அவருடன் உரையாடியவாறே சானியா மிர்ஸாவின்

விளையாட்டைப் பார்த்த இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விடை பெறுகிறோம்.

சேசி

© TamilOnline.com