டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
அக்டோபர் 4, 2009 அன்று 'கண்ணதாசனும் இலக்கியமும்' என்ற தலைப்பில் உமையாள் முத்து அவர்களின் உரை ஒன்றை டென்னசி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அவர் கவிஞர் கண்ணதாசன் மீது கொண்ட ஈர்ப்பு அனைவரும் அறிந்ததே.

நேஷ்வில்லுக்கு அவரை அழைத்து வந்த கோம்ஸ் கணபதி அவர்கள் சிறப்புப் பேச்சாளரை அறிமுகம் செய்து பேசினார். பின்னர் உமையாள் முத்து தனது சிறப்புரையை ஆரம்பித்தார். மரணம் தவிர்க்க முடியாதது, பல மேதைகள் தமது வாழ்நாளில் மரணத்தை வென்று விடுவோம் என்று சொன்னதில்லை. ஆனால், கவிஞர் கண்ணதாசன் 'எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று துணிந்து பாடியவர். அது கர்வத்தினால் சொல்லப்பட்டதல்ல.

கண்ணதாசன் என்றதுமே நினைவுக்கு வரும் பாடல்களை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. 'கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையே' என்ற பாடலை, கண்ணதாசன் எத்தகைய சூழ்நிலையில் தன்னையே பாடுபொருளாக வைத்துப் எழுதினார் என்பதை உள்ளத்தை உருக்கும் வகையில் விளக்கினார்.

எம்.எஸ். விஸ்வநாதன் தூங்கிக் கொண்டிருந்ததால் இசையமைக்கத் தாமதமாகிவிட, அதனால் இயக்குநர் நச்சரிப்புத் தாளாமல் 'அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா' என்று பல்லவி எழுதியதைச் சொன்னபோது அரங்கத்தில் சிரிப்பலை.

கண்ணதாசனைப் பற்றி பல சுவையான தகவல்களையும், அவரது பாடல்களில் இலக்கிய நயம் எப்படிச் சிறக்கிறது என்பதையும் விளக்கமாகக் கூறிய உமையாள் முத்து, கூட்டத்தின் முடிவில் தற்காலக் கவிஞர்களின் கவிதைகள் எப்படி கண்ணதாசனிடமிருந்து வேறுபடுகின்றன என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார். வாலிக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த நட்புறவை மிகச் சுவைபடக் கூறினார்.

சொற்பொழிவாளர் எந்தக் கவிஞரையும் விமர்சிக்கவோ சாடவோ இல்லை. ஒவ்வொரு கவிஞரிடத்தும் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொண்டார். கவிதையும் இசையும், கவிஞர் காலத்திலிருந்து மாறிவிட்டது என்பதை மிகவும் ஆக்கப்பூர்வமாகவே எடுத்துக் கொண்டார்.

கண்ணதாசன் என்று பெயர் கொண்டு, கலங்காதிரு மனமே என்று முதல் பாட்டெழுதி, கண்ணே கலைமானே என்று தாலாட்டுடன் மீளாத்துயில் கொண்ட அந்த மாபெரும் கவிஞனை நினைவுக்குக் கொண்டுவந்த உமையாள் முத்துவின் அருமையான உரை மறக்கவொண்ணாதது.

அருணாசலம், டென்னசி

© TamilOnline.com