CAIFA மூலம் பெப்பரப்பே வழங்கிய நாடகமாலை
நவம்பர் 14, 2009 அன்று போலிங்ப்ரூக் பள்ளி அரங்கத்தில் CAIFA (Chicagao Academy of Indian Fine Arts) என்ற லாப நோக்கற்ற அமைப்பிற்காக 'நாடகமாலை' ஒன்றை சிகாகோவின் "பெப்பரப்பே" நடத்தியது. இந் நிகழ்ச்சியில் இரண்டு தமிழ் நகைச்சுவை நாடகங்கள் இடம்பெற்றன. 'பரதம்' நாட்டியக்குழுவின் நடனத்தோடு தொடங்கிய நிகழ்ச்சியில், "பெப்பரப்பே" குழுவின் இளைய உறுப்பினர் நிவேதா சந்திரசேகரின் வரவேற்புரை வழங்கினார்.

முதலாவதாக ரங்கா வசனம் எழுதிய 'பெருங்கா(வி)யம்' என்ற நாடகம், தற்காலத் தொலைக்காட்சித் தொடர்கள் எப்படி எடுக்கப்படுகின்றன, அதில் வரும் கதா பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சித்திரித்தது. ப்ரொட்யூசர் கோவிந்தராமரெட்டியாக சேகர், டைரக்டர் தாமோதரனாக ரங்கா, அசிஸ்டெண்ட் டைரக்டர் பச்சையப்பனாக மணி, ஹீரோயின் ஜிம்ரன்னாக வித்யா, ஆலந்தூர் ஆண்டாளாக லட்சுமி, ஹீரோ ஆண்டியப்பனாக ரவிசங்கர், அப்பாசாமியாக ஸ்ரீராம், மகனாக அரவிந்த், அய்யாசாமியாக ரவிக்குமார், மாதாஜியாக உமா, மாதியாக சுதர்சன் நடித்தனர். பின்னர் மருத்துவர்கள் சுசீலாவும் அவர் கணவர், சுப்பிரமணியமும் 'வான்மீதிலே' திரைப்பாடலுக்கு நடனம் ஆடினர்.

அதன் பிறகு கல்யாணடிராமா என்ற பிரபல நாடகாசிரியர் கோவை அனுராதாவின். மூலக்கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம். இதற்கு ரங்கா வசனம் எழுதியுள்ளார். பணக்காரத் தம்பதிகளான செருக்குப் பிடித்த செல்போன் செல்வராணிக்கும், அசட்டுக் கணவன் கல்யாணசுந்தரத்துக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இவர்களின் தைரியசாலிப் பெண் கல்யாணி. இன்னொரு குடும்பம் பட்டாபிராமன், பட்டு தம்பதியர். இவர்களின் பயந்த சுபாவம் கொண்ட மகன் கல்யாணராமன். கல்யாணிக்கும், கல்யாணராமனுக்கும் கல்யாணம் செய்து வைக்கப் பாடுபடுகிறார் பஞ்சாபகேசன் என்ற இரு குடும்பத்துக்கும் பொதுவான நண்பர். கடத்தல், காமெடி என்று அமர்க்களப் படுத்துகிறது இந் நாடகம்.

கண்ணுசாமியாக கோவைத் தமிழில் பேசி நடித்த மணி, கல்யாணசுந்தரமாக ரங்கா, செல்போன் செல்வராணியாக லட்சுமி, கராத்தே கல்யாணியாக வித்யா, பட்டாபிராமனாக ராஜ், பட்டு மாமியாக ரஞ்சனி, கோதண்டராமனாக ஸ்ரீராம், கல்யாணராமனாக அரவிந்த், கடத்தல் தலைவனாக ரவிக்குமார், ஸ்பைடர் உமன் சாந்தியாக வசுமதி, பீம்சிங்காக சுதர்சன், திருட்டு திலகாவாக உமா, போலிசாக ரவிசங்கர், மாதவன், கல்யாண தரகர் பஞ்சாபகேசனாக சேகர் என்று பொருத்தமான பாத்திரப் படைப்புகள்.

பின்னணி இசை மற்றும், ஒலி அமைப்புகளை மாலதியும் நிவேதாவும் சிறப்புடன் அமைத்திருந்தனர். நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு ஒலி விளம்பரங்களை அமைத்து, நாடகத்தின் இடையே ஒலிபரப்பியது அசத்தலான யுக்தி. நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிறுவனக் கொடையாளர்களும், ரசிகர்களும் இதனை நன்றாக ரசித்தனர். ஒப்பனை தீபா, சுபா. அரங்கப் பொருட்களை (props) ரவிக்குமார் கவனித்துக் கொண்டார். நிதி நிர்வாகம் மணி, ராஜ். இணை இயக்கம் ரங்கா, பொது இயக்கம் சேகர்.

இணைய தளம்: www.peppae.com

ஜயஸ்ரீ (சிகாகோ), சுவாமிநாதன் (ஷோம்பர்க்), வசந்தா (நேப்பர்வில்)

© TamilOnline.com