துணுக்கு: தென்கச்சியார் சொன்ன கதை
ஒரு ஊர்ல ஒரு முனிவர் இருந்தார். ஒருநாள் அவரப் பாக்க நாலு பேரு வந்தாங்க. முனிவர்கிட்ட போயி, சாமி, இந்த ஒலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் 'தெரிலப்பான்னு' பதில் சொன்னாரு. ஆனாலும் வந்தவங்க விடல. என்ன சாமி நீங்க. நீங்க எவ்ளோ பெரிய முனிவர். இதைக்கூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் அவங்ககிட்ட, சரி. இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போறேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்குக் காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லணும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும் அப்டின்னாரு. சரின்னு அந்த நாலு பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறிக்கிட்டாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல புலி ஒண்ணு குட்டிபோட்டுக் கிட்டு இருந்திச்சி. குட்டி போட்டதுக்கு அப்புறமா தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு உணவு தேடி ஒரு ஆத்துப் பக்கமா வந்ததுச்சு. இந்தப் பக்கமா ஒரு மான், குட்டி போட்டுட்டு தாகத்துக்கு தண்ணீ குடிக்கிறதுக்காக அதே ஆத்துப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு, தானும் சாப்புட்டுட்டு தன்னோட குட்டிகளுக்கும் கொடுத்திச்சி. அதச் சாப்புட்ட புலிக் குட்டிங்களுக்கு ஒரே சந்தோஷம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகுடுத்த மான் குட்டிகளுக்கு ஒரே வருத்தம் - இந்தக் காட்சிய அந்த நாலுபேர் கிட்டயும் காட்டின முனிவர், இதப் பத்தி உங்களோட கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த நாலு பேருல ஒருத்தன், இது ரொம்பத் தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போயிருச்சேன்னான். ஒடனே அந்த விமானம் அவன கீழ தள்ளிவிட்டுடுச்சு. ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்ததப் பாத்த அடுத்த ஆளு, இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னான். ஒடனே அவனையும் விமானம் கீழ தள்ளி விட்டுருச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த மூணாவது ஆளு ரொம்ப உஷாராச் சொன்னான், இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து முனிவர், ஏம்பா உன் கருத்து என்னன்னு கேட்டாரு. அதுக்கு அவன், தெரியலயே சாமின்னான். இந்த தடவை விமானம் அவனக் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சேர்த்துச் சுமந்துகிட்டே பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சுது.

இந்தக் கதையிலேர்ந்து தெரிஞ்சுக்குற நீதி என்னன்னா, நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும். தேவையில்லாத விசயங்களத் தெரிஞ்சிக்க வேண்டாங்கறதுதான். அதுமாதிரி நமக்குத் தெரியாத விஷயங்கள் குறிச்சு தெரிஞ்ச மாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறதுதான் உத்தமம்.

© TamilOnline.com