ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
மார்ச், 25, 2006 அன்று 'ஸ்ருதி ஸ்வர லயா' தனது இரண்டாம் ஆண்டு விழாவில் ·ப்ரீமாண்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுராதா அவர்களால் 'பாரதி கலாலயா' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நுண்கலைப் பயிற்றுப் பள்ளி 2004-ம் ஆண்டில் 'ஸ்ருதி ஸ்வர லயா' என்ற புதிய பெயரில் இயங்கி வருகிறது. இங்கு கர்நாடக சங்கீதம், வட இந்திய சங்கீதம், பல இசைகருவிகளில் பயிற்சி மற்றும் பரத நாட்டியம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. காலை 8 மணிக்குத் தொடங்கி நிகழ்ச்சிகள் இரவு வரை இடைவிடாது நடந்தது குறிப்பிடத்தக்கது. சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. இங்கே பயில்வோருடன் ஆசிரியர்கள் மற்றும் ஆர்வம் கொண்ட மற்ற விருந்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடிச் சபையோரை மகிழ்வித்தனர்.

பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைக் கேட்கும் போது திருவையாற்றில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்து கொண்டது போன்ற உணர்வே ஏற்பட்டது. தொடர்ந்து 5 முதல் 15 வயது வரையிலான ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கீர்த்தனைகளைப் பாடினர். சிலர் வயலின், வீணை போன்ற கருவிகளை வாசித்தனர். இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த குழந்தைகள், கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்று, மேடைக்கூச்சம் எதுவு மின்றி, கைகளில் குறிப்பேடு இல்லாமல் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்து, தாளம் தப்பாமல் பாடல்களை அனுபவித்துப் பாடியது பெருமைக்குரிய விஷயமாகும்.

தொடர்ந்து, பள்ளியில் மிருதங்க ஆசிரியரான ரவீந்திரபாரதி சுமார் ஒரு மணி நேரம் மிருதங்கம் பற்றிய விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார். சங்கீதத்தில் காலப்பிரமாணம், சதுஸ்ரம், திஸ்ரம் முதலிய தாள வகைகள், தனி ஆவர்த்தனம் வாசித்து முடிக்கும்போது பாடுபவர் பாட்டை எப்படித் தொடர வேண்டும், முக்தாயம், மொஹரம் என்பவற்றை அருமையாக வாசித்துக் காண்பித்து விளக்கினார்.

பிற்பகல் பகுதியில் சிறுமி சந்திரா (8 வயது) பாடிய 'ராம நன்னு ப்ரோவரா' என்ற ஹரிகாம்போதி பாடலும், 'விஸ்வேஸ்வர' என்ற சிந்துபைரவிப் பாடலும் செவிக்கு மிக இனிமையாக அமைந்தது. சிறுமி சிவதுர்கா (10 வயது) பாடிய மோகனகல்யாணி மற்றும் தர்பார் ராகப் பாடல்கள் ரஞ்சகமாக இருந்தன. சபையோர் இவர்களுக்கு அளித்த இடைவிடாத கரகோஷமே இவர்களது தேர்ச்சிக்குச் சான்று. பெரியவர்கள் வரிசையில் மாலா சிவகுமார், லாவண்யா குமார், மதுரை மீனாட்சி, ஜெகதா, ரவிசந்திரன் குருமூர்த்தி முதலியோரின் பாடல்கள் குறிப்பிடத் தக்கபடி இருந்தன.

விழாவிற்குச் சிகரம் வைத்தாற் போல் அமைந்தது நிறைவாக அனுராதா சுரேஷ் தன் மகள் மானஸா சுரேஷ¤டன் இணைந்து நிகழ்த்திய குறுங்கச்சேரி. தோடி வர்ணத்தில் தொடங்கி, பாபநாசம் சிவனின் தமிழ்க் கீர்த்தனை மற்றும் ஒரு தியாகராஜரின் கீர்த்தனைக்குப் பிறகு எடுத்துக் கொண்ட 'பஞ்சாஷட் பீடரூபிணி' (கர்நாடக தேவகாந்தாரி) பாடல் தேவகானம் தான். 'வண்டாடும் சோலை' என்ற கல்கியின் பாடலும், 'வேங்கட சைல விஹாரா' என்ற அமீர் கல்யாணி பாடலும் நமக்கு, மறைந்த பாரத ரத்னா திருமதி எம்.எஸ். சுப்பு லட்சுமியை நினைவுக்கு கொண்டு வந்தது. முடிவாக மறைந்த மேதை மகாராஜபுரம் சந்தானம் பாடி பிரபலப்படுத்திய 'விளையாட இது நேரமா' என்ற ஷண்முகப்ரியா ராக பாடல் எல்லோர் நெஞ்சையும் நெகிழ்வித்தது.

விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்களில் ஒரு சில அமெரிக்க மற்றும் பிலிப்பைன் நாட்டு ரசிகர்களையும் காண முடிந்தது. முக்கியமாக குறிப்பிட வேண்டியது திரு ரவீந்தர பாரதி பிற்பகல் தொடங்கி இறுதிவரை இடைவிடாது பல பாடகர் களுக்கு மிருதங்கம் வாசித்து அனைவரது பாராட்டையும் பெற்றதுதான்.

செவிக்கு மட்டுமின்றி, வயிற்றிற்கும் உணவு ஈயப்படும் என்பதற்கு ஏற்ப, விழா அமைப் பாளர்கள் வருகை தந்த அனைவருக்கும் பல உணவு வகைகளை காலையிலும், மாலை யிலும் பரிவுடன் உபசரித்து அளித்தது எல்லோராலும் மிகவும் வரவேற்கப்பட்டது. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களை மேடையில் ஏற்றி, கச்சேரி ஏற்பாடு செய்து அவர்களது திறமைகளை வெளிக்கொணர்ந்த விழா நிர்வாகிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கடைசியாக விழா அமைப்பாளர்களுக்கு வேண்டுகோள். இத்தகைய நீண்ட நேர விழாக்களில், தாள வாத்திய கச்சேரி ஒன்றும் அமைத்திருந்தால் மிருதங்கம் மற்றும் தபலா பயிலும் மாணவ மாணவியரின் திறமையையும் வெளிக் கொணரலாம்.

மற்றொன்று, எல்லா பாடகர்களுக்கும் வயிலின், மிருதங்கம் உறுதுணையாக ஏற்பாடு செய்திருந்தால், கச்சேரிகள் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும். இனி வரும் விழாக்களில் இவைகளை முடிந்தால் கடைப்பிடிக்கலாம்.

திருநெல்வேலி விஸ்வநாதன்

© TamilOnline.com