'ராமானுஜர்' மேடை நாடகம்
ராமனுஜர் நாடகத்திற்காக இ.பா.வுக்கு இந்தியாவின் உயர்ந்த இலக்கிய விருது களில் ஒன்றான சரஸ்வதி சம்மான் வழங்கப் பட்டது. சென்னையில் ஒருமுறை அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம், சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சித்திரைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மீண்டும் அரங்கேறியது. பாரதி நாடக மன்றத்தின் நிறுவனர் மணி மு. மணிவண்ணன் மேடை வடிவம் அமைத்து, இயக்கி, மேடையேற்றினார். பாகீரதி சேஷப்பன், பெர்க்கிலி பல்கலை நாடகத்துறையைச் சார்ந்த ரூபன் மோகன், மற்றும் ஆஷா மணிவண்ணன் ஆகியோரின் இயக்கம் மற்றும் தயாரிப்பு துணையுடன் இந்த நாடகம் அரங்கேறியது. நாடகத்தில் நடித்த நடிகர்கள் சிலிகான் வேல்லியில் பணியாற்றுபவர்கள்.

ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா ராமானுஜர் வேடத்தை மென்மையாகவும் சிறப்பாகவும் செய்திருந்தார். கிருஷ்ணன், திருமுடி, ரேவதி, சுந்தர், அஜீதா, ராமானுஜம், கணபதி, வசந்தி, கருண், ராம்கி, நித்யா மற்றும் பலர் மிகுந்த சிரத்தையும், உழைப்பையும் இந்த நாடகத் தின் வெற்றிக்காக அர்ப்பணித்திருந்தனர். ராமானுஜருக்கு ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகம் கிடைப்பது, தனது சமத்துவக் கருத்துக்களுக்கு தடையாக இருக்கும் மனைவியைப் பிரிவது, சதிகாரர்களால் சோழ நாட்டை விட்டு வெளியேறுவது, ரகசிய திருமந்திரத்தை கற்றுக் கொண்டு அதைக் குருவின் கட்டளையும் மீறி மக்களுக்கு அருள்வது, சமண மன்னன் பிட்ல தேவன் மகளின் மனநோயைத் தீர்ப்பது, மேலக்கோட்டைக் கோவிலை நிறுவி அதைத் தாழ்த்தப் பட்ட திருக்குலத்து மக்களுக்கு அர்ப்பணிப்பது போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றன.

பிரம்மாண்டமான பின்னணி அமைப்புகள் காட்சிகள் ஏதும் மேடையில் கொணராம லேயே சரித்திரகாலத்து நாடகத்தை மேடையேற்றலாம், நடிப்பினால் மட்டுமே பின்னணிக் குறிப்பால் உணர்த்தலாம் என்ற நம்பிக்கையை ராமானுஜர் நாடகம் அளித்தது.

'ஸ்ருதி ஸ்வர லயா' இசைக்கலைஞர் களுடன் 'தில்லானா' முகுந்தன் நரசிம்மன் அமைத்திருந்த பின்னணி இசையும் குறிப்பிடத்தக்கது. திருக்கோஷ்டியூர் நம்பி அருளிய ரகசிய திருமந்திரத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும் காட்சியில் மேடையில் பொது மக்களைக் காண்பிக்காமல் அரங்கில் இருந்தோரையே மக்களாகப் பாவித்து ராமனுஜர் பேசியதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இளைய தலைமுறைத் தமிழ்க் குழந்தை களுக்கு ராமானுஜர், அவர் வாழ்ந்த காலக் கட்டம், அவரது பணிகள் பற்றிய குறிப்பு களைக் கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். நாடகத்தின் சில காட்சிகள் பார்வையாளர்களுக்குப் புரியும் முன்னரே வேகமாக நகர்ந்துவிட்டன. குறிப்பாக ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையெழுதும்போது அவரது சிஷ்யை ஆண்டாள் அம்மாளின் வாதத்தை ஏற்கும் இடம், உறங்காவில்லி நாச்சியார் மூலம் சீடர் களுக்கு அடக்கத்தைப் போதித்த காட்சி போன்றவற்றில் சற்று மெதுவாக நகர்ந் திருந்தால் புரிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.

சீர்திருத்தவாதிகள் என்றுமே எதிர்ப்பு களைக் கடக்க வேண்டும் என்பதையும் எல்லாச் சீர்திருத்தங்களும் அமைப்புகளில் சடங்குகளாகும்போது நீர்த்துப் போவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் இ.பா. "சாதியற்ற சமுதாயம், நாதியற்றவர்களுக்கும் நற்கதி", "நால்வகைச் சாதி நாராயணனுக்கு இழைக்கும் அநீதி", "வைணவ சமுதாயத்தில் பிராமணன் என்றும் மறவன் என்றும் யாரும் இல்லை", "அரங்கா, ஜாதியைக் கற்பித்தது யார், நீயா? இவர்கள் தானே", "நல்ல மனிதனாய் இருப்பதே ஓர் உயர்ந்த மதம்" போன்ற கூர்மையான வசனங்கள் பலத்த பாராட்டுகளைப் பெற்றன.

அருமையான ஒலி, ஒளி அமைப்பும் மெருகேறிய நடிப்பும் இணைந்து அற்புத மான அனுபவத்தை அளித்தது. பேராசிரி யரின் உரையுடன் நாடகம் நிறைவேறியது.

ச. திருமலைராஜன்,
பிரிமான்ட், கலி.

© TamilOnline.com