மேலே படி
உ.வே.சா. அவர்களை ஒரு விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். விழா கட்டிடத்தின் முதல் மாடியில் நடைபெற இருந்தது. தள்ளாமை காரணமாக மெதுவாக வந்து கொண்டிருந்த அவரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் தமிழறிஞரான பாஸ்கரத் தொண்டைமான். ஒவ்வொரு படியில் உ.வே.சா. காலை வைக்கும்போதும் தொண்டைமான் "மேலே படி, மேலே படி" என்று சொல்லியபடி அழைத்துப் போனாராம். விழாவில் பேச எழுந்த உ.வே.சா, "இப்போது நான் என் ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை நினைத்துக் கொள்கிறேன். அவர்தான் எப்போதும் மாணவர்களை மேலே படி என்று அடிக்கடி சொல்வது வழக்கம். அவர் காலத்திற்குப் பிறகு ஓர் இளைஞர் இன்று என்னை மேலே படி என்று ஞாபகப் படுத்தினார். அவருக்கு என் நன்றி" என்றாராம் நெகிழ்ச்சியோடு.

டாக்டர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com