மே 2006: வாசகர் கடிதம்
பரிவுதான் எவ்வளவு விதங்களில் பரிமளிக்கிறது என்பதைத் தெளிவாக 'பரிவு' என்கிற தலைப்பில் சங்கர ராம் எழுதி யிருப்பதை மெச்சுகிறேன். பரிவு இல்லை என்றால் சரிவுதான். காசிமாநகரைப் பற்றி சீதா துரைராஜ் ரத்தினச் சுருக்கமாக எழுதி இருக்கிறார்கள். மருத்துவக் குறிப்புகளை வாசகர்கள் வரவேற்பார்கள். குடந்தையில் கணித மேதை ராமானுஜம், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் முதலியோர் படித்த கல்லூரியில்தான் பேரா. இந்திரா பார்த்தசாரதி படித்தார் என்பதைக் காண மட்டற்ற மகிழ்ச்சி. பேரா. இந்திரா பார்த்தசாரதியிடம் தென்றல் நிருபர் கேட்ட சிறந்த கேள்விகளையும் அதற்கு அவர் தந்துள்ள ஆழமான பதில்களையும் படித்து மகிழ்ந்தேன்.

அட்லாண்டா ராஜன்

ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள 'தென்றல்' குழுவினருக்கு என் பாராட்டுகள்.

கேரி சோபர்ஸாலும் பாராட்டப்பட்ட வெங்கட்டின் கிரிக்கெட் நேர்முகம் அருமையாக இருந்தது. கிரிக்கெட்டில் இருந்த பலர் அவரை நடத்திய விதமும் அவர் அதற்கு நடந்துகொண்ட நல்ல விதமும் அனைவரும் அறிந்ததே.

அவரது தலமையில் சுனில் கவாஸ்கர் அறுபது ஓவர்களில் 36 ரன்கள் எடுத்தது பற்றி ஏன் தென்றல் கேட்கவில்லை?

ஆசிரியர் பக்கம் நன்றாக உள்ளது. ஆனால் சில சமயம் மிக மென்மையாக இருக்கின்றது. வெள்ள நிவாரண வேலைகளில் தமிழ்நாடு அரசு எடுத்த நடைமுறை பற்றி எதிர்கட்சித் தொலைக்காட்சி வைத்த விமரிசனங்களைத்தான் சொல்கிறேன். அவசர நிலைமையில் ஆளும் கட்சியைக் குறை கூறாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வாடும் மக்களுக்கு உதவ வேண்டும்.

ராஜலக்ஷ்மி தியாகராஜனின் பயணக் கட்டுரையில் கொடுத்துள்ள துல்லியமான பயணக்குறிப்புகள் போல இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளில் கூட இருப்பதில்லை. சீதா துரைராஜின் 'ஒளிநகரம் காசி' நன்றாகவும் பிறருக்கு வழிகாட்டுவதாகவும் இருந்தது.

குறுக்கெழுத்துப் புதிர் முதலில் சற்றுக் கடினமாக இருந்தாலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கொஞ்சம் முயன்றால் சிலவற்றையாவது போட இயலுகிறது. மாயாபஜார் அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ப இருப்பதுடன் இங்கு வரும் இந்தியர்கள் செய்து பார்க்கக்கூடிய வகையில் எளிதாக உள்ளது.

சினிமாவுக்கு ஒரு பக்கம் மட்டும் தானா? 'முக்கோணங்கள்' சிறுகதையும் அதே இதழில் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பற்றிய கட்டுரையும் அருமை. கலிபோர்னியா பாட நூல்களில் இந்து மதம் சர்ச்சை
நல்ல ஆராய்ச்சியுடன் கூடியதாக இருந்தது. இம்மாதிரி சர்ச்சைகள் இந்தியாவிலும் உள்ளன. 'நலம் வாழ' கட்டுரையில் உள்ளவை இன்றைய நடைமுறை உலகத்திற்குத் தேவையானதுதான்.

ஆர்.துரைசாமி

நான் ஓர் எழுத்தாளன். முந்தைய 'தென்றல்' இதழ் ஒன்றைக் கனடாவில் வசிக்கும் என் மகளின் வீட்டில் மிக ரசித்துப் படித்தேன்.

முன்னாள் போல் அல்லாமல் இன்றைய தமிழ்ப் பத்திரிகைகள் ஒரே ஒரு சிறுகதையைப் போட்டுவிட்டு, ஏராளமான அரசியல் மற்றும் சினிமா வம்புகளைத்தான் பிரசுரிக்கின்றன. மாறாக, 'தென்றல்' நிறைய அறிவார்ந்த, இலக்கிய எழுத்துக்களைத் தருகிறது. ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

டி.கே. ஜகன்னாதன், ஒட்டாவா, கனடா.

© TamilOnline.com