இலவசம், இலவசம்!
ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு மறந்து போவது வழக்கம். இந்த முறை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களே அதிகம் காணப்படுகின்றன.

தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் நியாயவிலைக் கடை அரிசியை வழங்குவோம் என்றதோடு, இலவச கலர் டிவி, இலவச மனைப் பட்டா என்று தாராளமான வாக்குறுதிகளைக் கூறி வருகிறது. ஆட்சிக்கு வந்தால் தான் இடும் முதல் கையெழுத்து இரண்டு ரூபாய் அரிசிக்குத்தான் என்று கருணாநிதி மேடைகளில் கூறுகிறார்.

மக்கள் நலத் திட்டங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகள், வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வழிவகைகள் என்பது போன்ற முக்கிய விஷயங்களுக்கு முதன்மை தரப்பட வில்லை என்பது ஒருபுறம் இருக்க, காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்றுக்கு குறுக்கே அணை கட்டுவது பிரச்சனை போன்ற ஜீவாதார பிரச்சனைகளைப் பற்றிச் சிறிதும் வாய் திறக்காமல் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி சாத்தியமில்லை, அது மக்களை ஏமாற்றும் வேலை என்று சொல்லத் தொடங்கிய அ.தி.மு.க. தானே அந்த வலையில் வீழ்ந்தது.
ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்யப்போன ஜெயலலிதா ‘ஒவ்வொரு ரேஷன் அட்டை தாரருக்கும் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் 10 கிலோ அரிசி இலவச மாகத் தரப்படும்’ என்று அதிரடியாக அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருவர் பத்து கிலோ மட்டுமே வாங்கும் பட்சத்தில் அது இலவசமாகவே கிடைக்கும். இருபது கிலோ அரிசி வாங்கினால் நிகர விலை கிலோவுக்கு ரூ 1.75 தான் ஆகும்.

“இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவது சாத்தியமே” என்று தனது கூட்டணித் தலைவரை ஆதரித்துப் பேசிய ப.சிதம்பரம் இதை விமர்சிக்கமுடியாமல் மௌனம் காக்கிறார்.

எல்லாக் கட்சிகளும் மொத்தத்தில் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்குகின்றன என்பது சோகமான உண்மை.

கேடிஸ்ரீ

© TamilOnline.com