சென்னையில் குறுக்கெழுத்தாளர் கூட்டம்
'தென்றல்' குறுக்கெழுத்துப் புதிர் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்துள்ளது. சுவையான குறிப்புகள், பலதுறைச் சொற்கள், வாசகரைச் சீண்டும் லாவகம் என்று பல கோணங்களில் இதன் சிறப்பைக் குறித்து வாசகர்கள் எழுதி வருகின்றனர். இதற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர்களது ஆர்வத்தை வளர்க்கும் விதமாக 'குறுக்கும் நெடுக்கும்' என்ற பெயரில் ஒரு மின்மடல் குழுவைத் தொடங்கி டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் நடத்தி வருகிறார்.

தென்றல் குறுக்கெழுத்துப் புதிர் சென்னை அன்பர்கள் கூட்டம் குறுக்கும் நெடுக்கும் சார்பாக ஜூலை 18, 2009 அன்று அம்ருதா, பார்த்தசாரதி தம்பதியரின் அரும்பாக்கம் இல்லத்தில் நடைபெற்றது. இதில் தென்றல் முதன்மை ஆசிரியர் மதுரபாரதி, டாக்டர் வாஞ்சிநாதன் ஆகியோர் முக்கியமாகப் பங்கேற்றனர். சுவையான வலைப்பக்க எழுத்தாளர்களான 'பினாத்தல்' சுரேஷ் , யோசிப்பவர் (kathaiezuthukiren.blogspot.com), டாக்டர் அலர்மேலு ரிஷி உட்படப் பலர் வந்திருந்தனர். பார்த்தசாரதி குறுக்கெழுத்துப் புதிர்க் குறிப்புகளை எப்படி வகைப்படுத்தலாம் என்று ஒரு சுவையான அறிமுகம் செய்தார். அவரது துணைவியார் அம்ருதாவோ தட்டுநிறைய நாவூறும் பண்டங்களைக் கொடுத்துத் திணறடித்தார். நடுவே வந்து கொட்டிய 'கடி' ஜோக்குகளுக்கும் பஞ்சமில்லை.

உதாரணத்துக்கு ஒன்று: "முனிவர் முகத்தைப் பாம்பு கொத்தியது ஏன்?". "தவக்களைக்காக"!

© TamilOnline.com