இதயமுடுக்கி (Pacemaker)
முதலில் இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பற்றி அறிவோம். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேற்பகுதியில் ஏட்ரியம் (atrium) என்று சொல்லப்படும் பகுதி வலது, இடது என்று பிரிக்கப்படுகின்றது. கீழ்ப்பகுதியில் வென்ட்ரிக்கிள் (ventricle) என்று சொல்லப்படும் பகுதி வலது, இடது என்று பிரிக்கப்படுகின்றது. இதில் இடது ஏட்ரியம் பகுதியில் சைனு-ஆரிகுலார் கணு (SA node) இதயத் துடிப்பின் இயற்கை முடுக்கியாகச் செயல்படுகிறது. இதிலிருந்து உருவாகும் மின்தூண்டல், ஏட்ரியோ வென்ட்ரிகுலார் கணு (AV node) வழியே வென்ட்ரிக்கிள் அறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வென்ட்ரிக்கிள் துடிக்க ஆரம்பித்தவுடன் இதயத்தின் மூலம் மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செலுத்தப்படுகிறது. இதனால் இதயத்தில் இரண்டுவகைச் செயல்பாடுகள் உள்ளன. ஒன்று அழுத்திச் செலுத்துதல், மற்றொன்று மின்தூண்டல். மாரடைப்பு என்பது இரத்தம் அழுத்தும் வேலையைத் தடுக்கிறது. மின்தூண்டல் செயல்பாட்டில் குறை ஏற்பட்டால் செயற்கை இதயமுடுக்கி தேவைப்படும். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நமது இதயத்துடிப்பு சாதாரணமாக 60-100 வரை இருக்கும். உடற்பயிற்சி செய்யும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கும். தூங்கும்போது குறையும். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஒரு சிலருக்கு இது மிக அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கும், இரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிடுபவருக்கும் இதயத்துடிப்பு குறையும் அபாயம் உண்டு. இரத்த ஓட்டம் சீராக இருக்கும் வரை இந்த இதயத்துடிப்பின் எண்ணிக்கைக் குறைவு உபாதை தருவதில்லை. இரத்த ஓட்டம் குறையும்போது இதயத் துடிப்புக் குறைவினால், தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம். இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது படபடப்பு ஏற்படலாம். ஒரு சிலருக்கு 'Atrial Fibrillation' என்று சொல்லப்படும் இதயப்படபடப்பு ஏற்படலாம். இவர்களுக்கும் இதயத் துடிப்பைச் சீர்படுத்த இதயமுடுக்கி (பேஸ் மேக்கர்) தேவைப்படலாம். ஒரு சிலருக்கு இது தற்காலிகமாகத் தேவைப்படலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறுவைசிகிச்சை மூலம் நிரந்தரமாகத் தேவைப்படலாம்.

##Caption## இதயமுடுக்கி அறுவை சிகிச்சை முறை
மார்பகப் பகுதியில் தோலில் சிறிதாகக் கீறிச் சின்ன விசைபோல் இருக்கும் இந்த இதயமுடுக்கியை, இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வைத்துத் தைத்துவிடுவர். இதன் உள் பகுதியில் இருக்கும் மின்னணுக் கருவியின் முனையை இதயத்தின் வாயிலில் நுழைத்து விடுவர். இது இதயத் துடிப்பு மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ ஆனால், அதனை உணர்ந்து தானாகச் செயல்பட ஆரம்பித்து விடும். இதயத் துடிப்பின் அளவைச் சீர்படுத்திவிடும். இதயத் துடிப்பு சீரானதும், தானாகவே இந்த விசை தன் செயலைக் குறைத்து இதயத்தைச் தன்னிச்சையாகச் செயல்பட வைத்துவிடும். வாகனத்தை 'jump start' செய்வது போல, மின்சாரம் தடைபட்டதும் ஜெனரேடர் செயல்படுவது போல், இது இதயத்தை முடுக்கிச் செயல்பாட்டைச் சீர்படுத்துகிறது.

இதயமுடுக்கி யாருக்குத் தேவைப்படும்?
- மேற்கூறிய இதயத்துடிப்பு குறைவானவர்களுக்கு (Bradycardia or Sinus node disease).
- இதயத்தின் அறைகளுக்கிடையே தடை ஏற்பட்டவர்களுக்கு (Atrio Ventricular block)
- இதயப் படபடப்பு அதிகமானவர்களுக்கு (Atrial Fibrillation)
- தீவிர மாரடைப்பு நோயினால் இதய அறை ஒன்றன் செயல்பாடு குறைந்தவர்களுக்கு (Ventricular dysfunction causing ventricular arrhythmia)

இவர்களுக்கு ECG மற்றும் Holter monitoring, ECHO போன்ற பரிசோதனைகளுக்கு பிறகே இந்தக் கருவி பொருத்தப்படும்.

இதயமுடுக்கியின் வகைகள்
இதயமுடுக்கி மூன்று வகைப்படும். இதில் மிகவும் பிரபலமானது இரண்டு அறை இதயமுடுக்கி. இதன் ஒருமுனை ஏட்ரியம் வாயிலிலும், மற்றுமொரு முனை வென்ட்ரிக்கிள் வாயிலிலும் பொருத்தப்படும். இதன்மூலம் இரண்டு அறைக்கும் இடையில் செயல்பாடு தடையின்றி நடக்க ஏதுவாய் இருக்கும். ஒரு சிலருக்கு அதிவேகமாக ஏற்படும் அபாயகரமான ரத்த ஊட்டக் குறை (arrhythmia) ஏற்பட்டால், அதைத் தடுக்கும் மின்சார defibrillator பொருத்தவேண்டி வரலாம்.

இதயமுடுக்கி பொருத்தினால் என்னென்ன தவிர்க்க வேண்டும்?
இது மின்கலம் (பேட்டரி) மூலம் செயல்படுகிறது. அதனால் சில கருவிகள் இதன் அருகில் வந்தால் இது தேவையின்றி இதயத்தை முடுக்கி விடலாம். குறிப்பாக செல்போன்கள், iPod போன்ற கருவிகளை இதற்கு மிக அருகில் கொண்டு செல்லக்கூடாது. இந்தக் கருவி பொருத்தப்பட்டோர், இதற்கு எதிர்ப்புறக் கையில் செல்போனை வைத்துப் பேசலாம். இந்தக் கருவிகளை எதிர்ப்புற சட்டைப்பையில் வைக்கலாம். விமானப் பயணத்தின் போது 'metal detector' அதிக நேரம் இதன் மீது படாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இதை விமானப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும்.

MRI என்று சொல்லப்படும் மின்காந்த அலைப் பரிசோதனைகளும் தீர்வு முறைகளும் இவர்களுக்குச் செய்வதுகூடாது.

இதய முடுக்கி அறுவை சிகிச்சைக்குப் பின்...
இது ஒரு சில மணி நேரங்களில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை. நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து 1 முதல் 5 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். அதற்குப் பின்னர் சாதாரணமாகச் செயல்படலாம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதய நிபுணரிடம் இதைப் பரிசோதித்து கொள்ள வேண்டும். மின்கலத்தின் ஆயுள், துடிப்பின் அளவு போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும். மின்கலம் 5 முதல் 10 வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கலாம்.

இதயமுடுக்கியின் பின்விளைவுகள்
- இது அறுவை சிகிச்சையானதால், மயக்க மருந்தின் பின்விளைவு
- நுண்ணுயிர்த் தொற்று (Infection)
- வீக்கம்
- இரத்தக் கசிவு (Hematoma)
- நுரையீரல் காற்று குறையும் அபாயம் (lung collapse)

இதயமுடுக்கி பொருத்திய பின்னர் இதயத்துடிப்பினால் ஏற்படும் அபாயங்கள் குறைகின்றன. ஆனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம், உயர் இரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து போன்ற மற்ற நோய்களின் தன்மை மாறுவதில்லை. அதனால் இது பொருத்திய பின்னரும் மருந்துகளும், உடற்பயிற்சியும் அவசியமாகின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி நடத்தல் முக்கியம். மேலும் விவரங்களுக்கு www.mayoclinic.com அல்லது www.nhlbi.com போன்ற வலைதளங்களைப் பார்க்கவும்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com