கணிதப் புதிர்கள்
1. ஒரு குளத்தில் சில தாமரை மலர்கள் இருந்தன. அதை நோக்கிச் சில வண்டுகள் வந்தன. 1 பூவிற்கு 1 வண்டு என அமர்ந்த போது 6 வண்டுகள் மலர் கிடைக்காமல் மீதம் இருந்தன. அவையே 1 பூவிற்கு 2 வண்டுகளாய் அமர்ந்த போது 6 மலர்கள் மீதம் இருந்தன என்றால், வண்டுகள் எத்தனை, மலர்கள் எத்தனை?

2. ராமு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சில பதக்கங்களை வாங்கி வந்தான். அவன் தந்தை அதற்குப் பரிசாக முதல் பதக்கத்திற்கு 1 டாலரும், 2 வது பதக்கத்திற்கு 2 டாலரும், 3 வது பதக்கத்திற்கு 4 டாலரும் என தொடர்ந்து இரு மடங்குகளாகக் கொடுத்தார். ராமு தன்னுடைய பதக்கங்களுக்காக மொத்தம் 4095/- டாலர்களைத் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டான் என்றால் அவன் வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

3. ஆலமரத்தில் தங்கியிருக்கும் பறவை களைப் போல அரசமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளின் எண்ணிக்கை 8 மடங்கு. இரண்டு மரப் பறவைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வரும் தொகையும், பெருக்கினால் வரும் தொகையும் ஒன்றுக்கொன்று இட, வலமாக மாறி அமைந்திருக்கின்றன என்றால் அப்பறவைகளின் எண்ணிக்கை என்ன?

4. ஒரு இரும்புப் பெட்டகத்துள் எட்டு தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றில் சில முக்கால் கட்டிகள், சில அரைக் கட்டிகள், சில கால் கட்டிகள். பொற்கொல்லனை வரவழைத்து அவற்றை வெட்டித் தங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொள்ள மூன்று சகோதரர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களது ஆசிரியர் அவற்றை வெட்டாமலேயே சமமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று கூறி, அவ்வாறே செய்தும் காட்டினார். அவர் பிரித்தது எப்படி, முக்கால், அரை, கால் கட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

5. 1, 4, 27, 256........ வரிசையில் அடுத்து வரக் கூடிய எண், எது ஏன்?

விடைகள்

© TamilOnline.com