எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு விருது
பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட எஸ்.பி. பாலசுப்ரமண்யம் செய்த சாதனை பிரமிக்கத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளில் ஏறக்குறைய நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். பத்மஸ்ரீ உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் அவரை மேலும் கௌரவிக்கும் விதமாக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் டாக்டர் விருது வழங்கியுள்ளது. அவருடன் மூத்த நடிகைகள் கே.ஆர். விஜயா, எம்.என். ராஜம், என்.பி.சி.ஐ.எல். நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கே. ஜெயின், 'இஸ்ரோ' பேராசிரியர் பாஸ்கர நாராயணா ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

வட அமெரிக்கத் தெலுங்கு சங்கம் (www.tana.org) 2009ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு எஸ்.பி.பி.யின் பெயரை அறிவித்துள்ளது. ஜூலை மாதம் நடக்கும் விழாவில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே பிரபல பின்னணிப் பாடகி பி.சுசிலா, தயாரிப்பாளர், இயக்குநர் டி. ராமநாயுடு, பேரா. சி.ஆர். ராவ் ஆகியோர் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com