தூசு படிந்த மௌனம்
வளைந்துகிடக்கின்ற தெரு
வெளியேறிப்போகும்
சாக்கடைப் பாலத்தினோரம்
தனித்து நிற்கிறது துருப்பிடித்த மகிழ்வுந்து

முன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து
பின்னால் தாக்கியிருக்க வேண்டும்

திட்டுத்திட்டாய்த்
தெரியும் வண்ணங்களில்
ஒட்டியிருக்கும் இளமையை
அழித்துக்கொண்டிருக்கின்றன
பயணங்களின் தூசுகள்

பின்சீட்டின் காலி மதுப்புட்டிகள்
கடந்துசென்ற போதைகளின்
சௌகரியங்களாக இருக்கக்கூடும்

உடைக்கப்பட்ட கண்ணாடியினுள்
உறங்குகின்ற பயணங்கள்
சீட்டுக் கீறல்களில் கசிகின்ற நினைவுகள்

பாலத்தில் முகம்திருப்பாது
கடந்துபோகும் புதுவாகனத்துடன்
பகிர்ந்துகொள்ள இயலாத
சாலைகண்ட இளமை நினைவுகளை
இந்நாளைய புறக்கணிப்பின் வலிகளை
மௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கலாம்
அருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ
பூத்துக் கிடக்கும் எருக்கஞ்செடியிடமோ!

கோகுலன்,ஃபீனிக்ஸ், (அரி.)

© TamilOnline.com