சை. பீர்முகம்மது (மலேசியா)
மலேசியத் தலைநகரான குவாலலம் பூரில் 1942ல் பிறந்த சை. பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர் களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதிலேயே எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப் பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். சொந்தக் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள் கிறார்.

பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் காலத்தில் சிங்கப்பூரின் ‘தமிழ் முரசு' இவருக்குப் படிக்கக் கிடைக்கும். அதில் மாணவர் மணி மன்றம் என்ற ஒருபகுதி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வரும். வீட்டில் 1954 முதல் தொடர்ந்து வீட்டில் வாங்கிய தால் விடாமல் வாசித்தார். தானும் எழுதினால் என்ன என்று யோசித்தவர் சின்னச் சின்ன கட்டுரைகள் எழுதி அனுப்பியிருக்கிறார். பிறகு பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசுகள் பெற்றார். பள்ளியில் சை. பீர்முகம்மது மட்டும் தான் இஸ்லாமியர். பெரும்பாலோர் யாழ்ப்பாணத் தமிழர்கள்.

##Caption##தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனான இவர் பத்து வயதில்தான் பள்ளி யில் சேர்க்கப் பட்டிருக்கிறார். சில ஆண்டு களிலேயே இவரது தந்தை தனது இரண் டாம் மனைவியின் மூலம் வரிசையாகப் பிறந்த 13 குழந்தைகளையும் குடும்பம் பெருகு வதையும் காரணம் காட்டி படிப்பை நிறுத்திக் கொள்ளச் சொன்னார். இதைக் கேட்ட சை. பீர்முகம்மது வீட்டை விட்டு ஓடிப்போய், பெரியப்பா வந்து கூட்டிப் போகும் வரை ஒரு பஞ்சாபிக் குடும்பத்துடன் நான்காண்டு கள் வசித்தார். நான்கு மணிக்கு எழுந்து பஞ்சாபி வீட்டு மாடுகளையும் கொட்டிலை யும் சுத்தப்படுத்திப் பராமரித்து வந்திருக் கிறார். பள்ளி விட்டு வீடு திரும்பி மாடுகளை மேய்க்கக் கூட்டிப்போய் வந்தபின் இரவில் தான் பாடம் படிப்பார்.

பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு மாணவர் மணி மன்றம் போன்ற ஓர் அமைப்பைக் குவாலலம்பூரில் துவங்கினர். 1964ல் பினாங்கில் ஒரு மாநாடு நடந்தி ருக்கிறது. ஏழு ஊர்களில் இதேபோல ஆரம்பிக்கப்பட்ட மன்றங்கள் சேர்ந்து தமிழ் இளைஞர் மணி மன்ற அமைப்பு உரு வானது. இதன் முதல் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னா ளில் இந்த அமைப்பு மலேசியாவெங்கும் விரிந்து பல கிளைகள் உருவாகின.

இளமையில் கல்கண்டு பத்திரிக்கையின் கேள்வி-பதில் பகுதியை வாசித்து தன் அறிவை வளர்த்துக் கொண்டதாகச் சொல்லும் இவர் ரயில்வே ஊழியர்கள் சேர்ந்து நடத்திய முத்தமிழ்ப் படிப்பகம் என்ற தனியார் நூலகத்தைத் தன் வாசிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார். படிப்பு நின்று போனதும் ஒரு பத்திரிக்கை முகவரிடம் வேலைக்குச் சேர்ந்து, கிடைத்த பொழுதில் தமிழக இதழ்கள் அனைத்தையும் வாசித்தார்.

மு.வ., அகிலன், நா.பா., க.நா.சு., புதுமைப் பித்தன் என்று துவங்கிய இவரது வாசிப்பு ஜெயகாந்தனில் வலுப்பெற்று மௌனி, லா.ச.ரா. என்று நீண்டு சுந்தரராமசாமி, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராம கிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துக்களில் லயித்திருக்கிறது. குறிப்பாக பிரபஞ்சனின் 'பிரும்மம்' சிறுகதை இவருக்குள் மாற்றுச் சிந்தனையை விதைத்ததாகச் சொல்வார். இவரது கணிப்பில் ஜோ.டி. குரூஸ் எழுதிய ‘ஆழிசூழ் உலகு' 2000க்குப் பிறகு வெளியான புதினங்களில் முக்கியமானது.

'வண்மணல்' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'பெண் குதிரை' எனும் நாவல், 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் பயண நூல், 'மண்ணும் மனிதர்களும்' எனும் வரலாற்று இந்தியப் பயண நூல், 'பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்' ஆகியவை இவரது நூல்கள். இது தவிர, மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் எனும் கட்டுரை நூலையும் தொகுத்துள்ளார். 'கைதிகள் கண்ட கண்டம்' எனும் நூலை எழுதியதன் மூலம் இவர் மலேசிய நாட்டில் பயண இலக்கியக் கட்டுரைகளுக்கான புதுப் பாதையை வகுத்துள்ளார். இந்தக் கட்டுரை நூலில் கதைக்குரிய சுவாரஸியத்தைக் கொணரமுடியும் என்றும் நிரூபித்துள்ளார். மலேசியத் தமிழிலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டும் எனும் முக்கிய நோக்கத்துடன் 93 மலேசிய எழுத்தாளர்களுடைய 50 ஆண்டுச் சிறுகதை களை 'வேரும் வாழ்வும்' எனும் பெயரில் மூன்று தொகுதிகளாகத் தொகுத்துள்ளார்.

பிற இனங்களையும் சமயங்களையும் அவற்றின் சிறப்பான கொள்கைகளையும் கூறுகளையும் போற்றி மதிக்கும் மாண் புடைய இவர் எங்கே குறை கண்டாலும் வெறுப்பவராக இருக்கிறார். அத்துடன் அதை வெளிப்படுத்தத் தயங்காத துணிச்சல் கொண்டவராகவும் அறியப் பெறுகிற இவரது படைப்பு முதன்முதலில் தமிழகப் பத்திரிக்கையில் பிரசுரமானது 1966ல். சிங்கப்பூர் மலேசியாவுக்கு வந்திருந்த ‘தீபம்' இதழின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் இவருக்கு நண்பராகி, சை. பீர் முகம்மது எழுதியனுப்பிய மலேசிய நிகழ்வு களை 'கடல் கடந்த இலக்கியம்' என்ற பெயரில் தொடராகப் பிரசுரித்தார்.

##Caption## வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பண்பாளரான இவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், உதவித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளதோடு இந்திய குத்தகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நல்ல எழுத்தையோ படைப்பையோ அடையாளம் காணும்போது அங்கீகரிக்கும் மூத்த மலேசிய எழுத்தாளர் மட்டுமின்றி தமிழிலக்கியம் சார்ந்த விலாசமான அறிவுடைய இவர் சுவாரஸிய மான மேடைப் பேச்சாளரும் கூட.

ஜெயந்தி சங்கர்

© TamilOnline.com