எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது
ந. பிச்சமூர்த்தியில் தொடங்கிய தமிழ்க் கவிதை உலகில் படிமங்கள், உருவகங்கள் வழியாகத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, தொடர்ந்து எழுதி வரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன். அவருக்கு அமெரிக்கத் தமிழர்களின் கலாசார அமைப்பாகிய 'விளக்கு', இந்த ஆண்டிற்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வரும் இவ்வமைப்பின் மூலம் இதுவரை சி.சு.செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, ஞானக்கூத்தன், நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி.மணி, ராமானுஜம், அம்பை, தேவதேவன் ஆகியோர் கௌரவிக்கப் பெற்றுள்ளனர்.

1935ம் ஆண்டில் கோயம்பத்தூரில் பிறந்த வைத்தீஸ்வரன், கல்லூரி மேற்படிப்புக்காகச் சென்னை வந்தார். இந்தியன் ஏர்லைன்ஸில் விமான அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். எழுத்து, நடை, கணையாழி, கசடதபற, ஞானரதம், சதங்கை, கொல்லிப்பாவை, நவீனவிருட்சம், சுபமங்களா போன்ற இதழ்களில் இவர் எழுதியுள்ள கவிதைகள் குறிப்பிடத் தகுந்தவை. ‘உதய நிழல்' (1970), ‘நகரச்சுவர்கள்' (1994), ‘விரல் மீட்டிய மழை' (1996) ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. வைத்தீஸ்வரன் கவிதைகள் என்ற தொகுப்பு நூலும் வெளியாகியுள்ளது.

ஐம்பது ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து கவிதைக்களத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமான கவிஞர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற கவிஞரைத் தென்றல் வாழ்த்துகிறது.

© TamilOnline.com