எட்டு வயதில் எம்.சி.பி!
மதுரையைச் சேர்ந்த லவினாஸ்ரீக்கு வயது எட்டு. பள்ளி மாணவி. தற்போது உலகமே வியந்து பார்க்கும் ஒரு சாதனையைச் செய்து கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார் இவர்.

கம்ப்யூட்டர் பயிலும் மாணவர்களிடையே, அவர்களது கணிக்கும் திறன், ஆங்கில நுண்ணறிவுத் திறன், தொழில்நுட்ப முறையில் தீர்வு காணும் திறன், பிரச்சனை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை சோதித்துப் பார்க்கும் தேர்வு மைக்ரோசாப்ட் செர்டிபைட் ப்ரொஃபஷனல் (MCP) தேர்வு. இது 25 வயது முதல் 30 வயது வரை உள்ள எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ. மாணவர்கள் எழுதக்கூடிய தேர்வு. இந்தத் தேர்வில் கலந்து கொண்டு 1,000-த்திற்கு 842 மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் லவினாஸ்ரீ. 2005ம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்பா கரீம் ரந்தாஹா என்ற 10 வயதுச் சிறுமி, இந்தத் தேர்வில் வெற்றிபெற்றுச் சாதனை படைத்தார். தற்போது லவினா. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்சால் பாராட்டப்பட இருக்கிறார் லவினாஸ்ரீ. மூன்று வயதிலேயே 1,330 திருக்குறள்களையும் ஒப்பித்து, 'லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பிடித்தவர் தான் லவினா. கடந்த ஆண்டு மத்திய அரசின் தேசிய விருதும் இவருக்குக் கிடைத்தது. சாதனைச் சிறுமியைத் தென்றல் வாழ்த்துகிறது.

அரவிந்த்

© TamilOnline.com