ஒரு கிராமம், ஒரு இளைஞர்
அமெரிக்காவின் டெட்ராய்டில் பார்த்து வந்த சாஃப்ட்வேர் என்ஜினியர் வேலை, லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் என எல்லாவற்றையும் உதறிவிட்டு, ஒரு குக்கிராமத்தில் தங்கிச் சேவையாற்றி வருகிறார் இளைஞர் செந்தில்குமார். காரணம், சேவை மனப்பான்மைதான். 'கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் இறந்து போகிறார்கள். எத்தனையோ கிராமக் குழந்தைகளுக்கு திறமை இருந்தும் போதுமான கல்வி வசதி கிடைப்பதில்லை. திறமை இருந்தும், உழைக்கும் தகுதி இருந்தும் அவர்களுக்குச் சரியான வாய்ப்பு இல்லை. இதையெல்லாம் மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்' என்கிறார் இந்த இளைஞர்.

திருச்சி அருகே உள்ள தேனூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்த செந்தில் குமார், முதல்கட்டமாக ஒரு மருத்துவமனை, ஒரு கணினி மையம், மாணவர்களுக்கான பாடசாலை என ஆரம்பித்தார். இன்று இளைஞர்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தந்து, கிராமத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கிறார். இந்த வளர்ச்சிக்காக யாரையும் எதிர்பாராமல் தன் கையிலிருந்து நாற்பது லட்சம் ரூபாய்க்கும் மேல் இவர் செலவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கிராமங்களை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். இதற்குச் சமூக ஆர்வலர்களும் உதவ வேண்டும் 'என்கிறார் செந்தில்குமார். சாதனை இளைஞரின் கனவுகள் நிறைவேற வாழ்த்துவோம்.

அரவிந்த்

© TamilOnline.com