எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு
அக்டோபர் 18, 2008 அன்று ப்ரீமாண்ட்டில் எழுத்தாளர் திலீப்குமார் அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. பெர்க்கலி பல்கலைக்கழக மாணவர்களுடன் தற்கால இலக்கியம் பற்றிக் கலந்துரையாடல் செய்வதன் பொருட்டு சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்கு திலீப்குமார் வந்திருந்தார். பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்களும், கௌசல்யா ஹார்ட் அவர்களும், விரிகுடாப் பகுதி தமிழ்மன்றம் மற்றும் இலக்கிய ஆர்வலர்களைச் சந்தித்து அவர் கலந்துரையாட ப்ரீமாண்ட் நகரத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாவிட்டாலும், தமிழ்மீது கொண்ட பற்றால், குஜராத்தி மற்றும் பிற மொழிக் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தும், தமிழ்க் கதைகளைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்தும் சென்ற 35 ஆண்டுகளாகத் தமிழுக்குச் சேவை செய்து வருகிறார் திலீப்.

தமிழ்நாட்டில் குடியேறி வசிக்கும் குஜராத்தி மக்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் வகையில் கதைத் தொகுப்புக்கள் வெளியிட்டிருக்கிறார். இவருடைய கதைகள் பெரும்பாலும் சொந்த அனுபவங்களைச் சார்ந்தவையே என்கிறார். ‘கடவு' என்ற கதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதையை காவேரி கணேஷ் அவர்கள் வாசிக்க அதைப்பற்றிக் கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. அந்தக் கதை ஏற்கனவே தமிழ்த் தொலைக்காட்சியில் நாடகமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இவர் எழுதிய 'கடிதம்' சிறுகதையில் ஒரு கிழவர் கொஞ்சம் பணம் வேண்டும் என்று தனது உறவினருக்குக் கடிதம் எழுத விரும்புகிறார். அவருக்கு ஓர் இளைஞர் கடிதம் எழுத உதவுகிறார். வீட்டில் இருக்கின்ற அனைவரைப் பற்றியும் விசாரித்தும், உறவினர்களைப் பற்றிய கருத்துக்களைக் கூறியும் கடிதம் நீண்டு கொண்டே போகிறது. சிக்கனம் கருதி எப்பொழுதும் இன்லண்டு கடிதமே எழுதுவதால், இடம் போதாமற் போய் விடுகிறது. மேலும் ஒரு கடிதத்தில் தொடர்ந்து எழுதுகிறார். ஒரு கிழவர் இறக்கும் தருவாயில் எழுதிய கடிதம் பற்றிய இந்தக் கதை தொலைக்காட்சி நாடகமாக வந்தது. சாருஹாசன் அந்தக் கிழவர் வேடத்தில் மிக நன்றாக நடித்திருந்ததாக திலீப் குமார் கூறினார்.

மேலும் தற்கால இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய இலக்கிய விருதுகள் போன்றவைபற்றி நடந்த கலந்துரையாடல் மிகச் சுவையாக அமைந்திருந்தது.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com