அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
செப்டம்பர் 7, 2008 அன்று ஸ்ரீ ராம லலித கலா மந்திர் மாணவர் அஷ்வின் ஸ்ரீநிவாசனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சான் ஹோசேவிலுள்ள CET Soto theater-ல் நடந்தது. தியாகராஜர் இயற்றிய 'கண்ட ஜூடுமி' (வாசஸ்பதி), 'ஓ ரங்கசாயி' (காம்போதி) பாடல்களை அனுபவமுள்ள சங்கீத வித்வான் போன்று பாடி அனைவரது பாராட்டையும் பெற்றார் அஷ்வின். பைரவி ராகத்தில் அமைந்த சாமா சாஸ்திரியின் 'காமாக்ஷி' பாடலில் அந்தக் காமாட்சி தேவியையே கண்முன்பு கொண்டுவந்து நிறுத்தினார். இவை தவிர பாபநாசம் சிவனின் 'ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையான்', 'மகா கணபதே' இரண்டும் அற்புதம். பாலமுரளி கிருஷ்ணாவின் கதன குதூகல ராகத் தில்லானா எல்லோரையும் கவர்ந்தது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் என அனைத்து கீர்த்தனைகளையும் பாடியது ஸ்ரீ ராம லலித கலா மந்திரின் இயக்குநர் ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களின் திறமைக்கும் உழைப்பிற்கும் சான்று.

அஷ்வினுடைய குரல், உடற்கூறுக்கு ஏற்ற படி ராகங்களையும், பாடல்களையும் ஜெயஸ்ரீ வரதராஜன் திறம்பட அமைத்திருந்தார். உண்மையில் அஷ்வினின் சங்கீதம் அன்று அரங்கேற்றமாக மட்டும் அமையாமல், நல்ல கச்சேரியாகவும் இருந்தது. இவருடன் ரங்கஸ்ரீ வரதராஜன் (வயலின்), ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்) ஆகியோரின் பக்கவாத்தியம் அற்புதம். அஷ்வின் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைதிலி ஸ்ரீநிவாசன், கோவிந்தராஜன்

© TamilOnline.com