அக்டோபர் 2008: வாசகர் கடிதம்
என் பேத்தி பத்மா விஸ்வநாதனின் 'Toss of a Lemon' நாவல் பற்றித் திருமதி அலமேலு மணி அவர்கள் எடுத்த பேட்டி தென்றலில் வெளிவந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு நாளும் அந்த நாவலுக்கு ஆங்கிலத்தில் வந்த பேட்டிகளையே படித்துக் கொண்டிருந்தேன். நம் தாய்மொழியில் பேட்டியைப் படிக்க எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். அதை வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள். தென்றல் எனக்கு மாதாமாதம் தபாலில் வருகிறது. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தென்றல் மென்மேலும் வளர என் ஆசிகள்.

தனம் கோச்சோய்,
எட்மன்டன் (கனடா)

நவம்பர் மாதத் தென்றல் இதழைப் பார்த்தேன். அமெரிக்காவில் இருக்கும் தென்னிந்தியர்கள் இந்திய சமயம் மற்றும் கலாசாரம் குறித்த நிகழ்வுகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் மும்பையில் இருக்கிறேன் ஆனாலும் அடிக்கடி அமெரிக்காவுக்கு வந்துசெல்வேன். இந்தியாவில் பல கலைஞர்கள், பதிப்பாளர்களை நான் அறிவேன். அமெரிக்காவில் அச்சாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகை நல்ல தமிழில் எல்லாவற்றையும் வெளியிடுவது ஒரு சாதனைதான்.

கர்நாடக சங்கீதக் கலைஞர்களைக் கொண்டதுதான் என் குடும்பமும். டொரோண்டாவில் உள்ள என் மகள் அங்கே சங்கீத வகுப்புகளை நடத்தி வருகிறார்.

அமெரிக்காவில் இந்திய கலாசாரத்தைப் பரப்பும் குரு விஷால் ரமணியின் சாதனை மெச்சத் தக்கது. அவருக்கு எனது பாராட்டுகள்.

கேஷ்

***


செப்டம்பர் தென்றலில் வெளியான விஷால் ரமணி நேர்காணல் ஆர்வமூட்டும் படியாகவும், மனதைத் தொடும்படியாகவும் அமைந்திருந்தது. 'என்னிடம் வரும் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் கடவுளின் பிம்பத்தைப் பார்க்கிறேன்' என்று அவர் சொன்னது அற்புதம். 'எலி தந்த வலி' உண்மை கலந்த நகைச்சுவை. பத்மா விஸ்வநாதன் என் அத்தையின் பேத்தி. அவர் இந்தப் புத்தகம் எழுதும் முன் இந்தியா வந்து, என் பெற்றோருடன் தங்கிய நாட்கள் நினைவிற்கு வந்தன. தைரியமாக ஆட்டோ, பஸ் என தனியாகக் கிளம்பிப் போவார். தமிழ் பேசாவிட்டாலும் ஓரளவு புரிந்து கொள்வார். என் கொள்ளுப் பாட்டியின் கதை, பத்மாவின் சித்திரிப்பில் புத்தகமாக வெளிவந்தது பாராட்டத்தக்கதும் பெருமைக்குரியதும் ஆகும். பத்மாவுக்கு என் வாழ்த்துகள். 'தமிழ் வகுப்பு' கதை மனதைத் தொட்டது. மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் இளம் உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

***


இனிய மணம் கமழும் தென்றலில் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் வருகின்றன. இங்கு வாழும் தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இன்னும் நெடுங்காலம் தென்றல் மணம்வீச என்றென்றும் எங்கள் வாழ்த்துக்கள். தென்றல் வாசகர்களுக்கும், இங்குள்ள எல்லாருக்கும் நவராத்திரி, தீபாவளி வாழ்த்துகள். வாழ்க தென்றல்; வாழ்க வளமுடன்.

மைதிலி பார்த்தசாரதி,
மேரிலேண்ட்.

***


அன்பு வாசகர்களுக்கும் தென்றலுக்கும் எனது உளம் கனிந்த நவராத்திரி, தீபாவளி வாழ்த்துக்கள். மாதம் ஒருமுறை நற்றமிழ் மணம் வீசிவரும் தென்றலில் எனது சமையல் குறிப்புகள் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது அவொகேடோ பக்குவங்களுக்கு போனில் நன்றி கூறியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சரஸ்வதி தியாகராஜன்,
டேட்டன்,ஒஹையோ.

***


பத்து ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு வரும்பொழுதெல்லாம் இன்றியமையாத பொக்கிஷமாக தென்றலைத் தேடிப் படித்து மகிழ்கிறேன். இப்படி ஒரு தரமான இதழ் இந்தியாவில் இல்லையே என்றுதான் நினைக்கிறேன். தொடரட்டும் உங்களது பணி. வாழ்த்துக்கள்.

டாக்டர் M. நடராஜன்,
கேம்பெல், கலி.

© TamilOnline.com