சுந்தர் சி. 'வாடா'
'சிவப்பதிகாரம்', 'கண்ணும் கண்ணும்' படங்களைத் தயாரித்த ஸ்கிரீன்ப்ளே என்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் புதியதாகத் தயாரிக்கும் படம் 'வாடா'. இதில் சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கிறார். 'அரசாங்கம்', 'எங்கள் ஆசான்' படங்களில் நடித்துள்ள ஷெரில் பிரிண்டோ கதாநாயகி. மற்றொரு கதாநாயகி மேக்னா நாயுடு. இவர்களுடன் விவேக், ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, 'சங்கராபரணம்' ராஜலட்சுமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நாடே தேடிக்கொண்டிருக்கும் ஒருவன், ஓர் ஊருக்குள் இருந்துகொண்டு அனைவரையும் தன்னைப் பற்றிப் பேச வைக்கிறான். அவன் எதற்காகத் தேடப்படுகிறான், அவன் நல்லவனா, கெட்டவனா என்பதைப் பற்றிச் சொல்வதுதான் கதையாம். ஊட்டி, ரிஷிகேஷ், பொள்ளாச்சி, உத்தராஞ்சல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். கதை, திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்குபவர் ஏ. வெங்கடேஷ். வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர். இசை: இமான். ஒளிப்பதிவு: கே.எஸ்.செல்வராஜ். தயாரிப்பு: மோகன்ராதா. படத்திற்காக 'என்னடி ராக்கம்மா' என்ற 'பட்டிக்காடா பட்டணமா' படப்பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். பாடலுக்கு ஆடியிருப்பவர் குஷ்பு.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com