காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவார்
மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் பிரோதீப் சிக்தார். பதினேழு வயதாகும் இவர், சமீபத்தில் பிரிட்டனில் நடந்த சர்வதேச அளவிலான சாகசப் போட்டியில் பங்கேற்று, சிறந்த இளைஞருக்கான சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார். சவுத் யார்க்ஷயர் நகரில் நடந்த இந்தப் போட்டியில் பிரோதீப், மலை ஏறுவது, கயிற்றில் நடப்பது என எல்லாவற்றிலும் சளைக்காமல் பங்கு கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘போட்டிக்காக மலையில் ஏறும்போது, திடீரென மழை வந்து விட்டது. என் ஆலோசகரோ எப்போதும் பிரிட்டிஷ் ஆங்கிலத்திலே பேசினார். எனக்கு அது சரிவரப் புரியவேயில்லை. இப்படிப் பல பிரச்சனைகளை எதிர் கொண்டுதான் வெற்றி பெற்றிருக்கிறேன். என்னுடன் போட்டிகளில் கலந்து கொண்ட மற்ற இளைஞர்கள் எனக்கு ஊக்கம் அளித்தனர். எந்த பாரபட்சமும் காட்ட வில்லை. அதனால் என் குறை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை' என்றார்.

ஆமாம், அவருக்கு என்ன குறை என்கின்றீர்களா? அவர் பார்வையற்றவர்!

அரவிந்த்

© TamilOnline.com