அரைநூற்றாண்டுக்குப் பிறகு விமானம் எப்படி இருக்கும்!
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பயணிகள் விமானம் எப்படியிருக்கும் என்பதை வடிவமைப்பதற்கான சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் அனுஷா. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA நடத்திய அந்தப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கும் இவர் ஒரு தமிழ்ப்பெண். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் படிக்கிறார். இவருடன் ஸ்ரீநாத் என்கிற மாணவரும் இணைந்து இந்த வடிவமைப்புக்கு உதவியிருக்கிறார்.

'இப்போதிருக்கும் எந்த விமானத்தின் சாயலும் மாதிரியில் தெரியக் கூடாது, ஓடுபாதையின் நீளம் மிகக் குறைவாக இருக்கவேண்டும்' என்று பலவிதிகளைக் கருத்தில் கொண்டு இம்மாதிரியை இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இறக்கைகளின் நீளம், விமானத்தின் எடை போன்றவற்றைக் குறைத்திருப்பதால் இந்த மாடல் விமானம் கூம்பு வடிவில் தோற்றமளிக்கிறது. 'இது மாதிரியான விமானங்களால் எரிபொருள் செலவு மிச்சமாவதுடன், அதிக எடையையும் ஏற்றிச் செல்ல முடியும். எத்தனை வேகத்தில் பறந்தாலும் வெளியில் சத்தம் கேட்காது. புகை வராது' என்கிறார் அனுஷா. தற்போது இம்மாதிரி விமானத்தை உருவாக்கும் பயிற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனராம். அனுஷாவுக்கும் ஸ்ரீநாத்துக்கும் வாழ்த்துக்கள்.

அரவிந்த்

© TamilOnline.com