இவர்களல்லவோ நண்பர்கள்!
சிவகங்கையைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் சரவணன். பதினான்கு வயதான இந்தச் சிறுவன் உடல் ஊனமுற்றவன். தானே எந்த வேலையையும் செய்ய இயலாது. உடன் படித்து வரும் மாணவன் ஜீவா, சரவணனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறான். பள்ளிக்கு ஆட்டோவில் வரும் சரவணனை வகுப்பறைக்குத் தூக்கிச்செல்வது, எழுத உதவி செய்வது, புத்தகங்களை எடுத்துக் கொடுப்பது, உணவு ஊட்டுவது, கழிவறைக்குத் தூக்கிச் செல்வது, தண்ணீர் ஊற்றிக் கழுவி விடுவது எனச் சகல வேலைகளையும் சலிக்காமல் செய்கிறான் ஜீவா. சூர்யா என்ற மற்றொரு நண்பனும் சரவணனுக்கு உதவி செய்து வருகிறான்.

ஜீவா இதுபற்றிக் கூறும்போது, 'ஆறாம் வகுப்பிலிருந்து எல்லோரும் ஒன்றாகப் படித்து வருகிறோம். சரவணன் படும் கஷ்டங்களைப் பார்த்து அவனுக்கு உதவி செய்து வருகிறோம். கல்லூரியிலும் இணைந்து படித்து சரவணனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை' என்கிறான். சரவணன், 'இதுபோன்ற நண்பர்கள் கிடைத்ததால்தான் நான் நன்றாகப் படித்து வருகிறேன். கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஆக வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கை லட்சியம்' என்கிறான் மிகுந்த நம்பிக்கையுடன். நட்புக்கு உதாரணமாய்த் திகழும் இச்சிறுவர்கள் சாதிக்க வாழ்த்துவோம்.

அரவிந்த்

© TamilOnline.com