WeReachOut இரண்டாம் ஆண்டு விழா
ஜூன் 1, 2008 அன்று WeReachOut தன்னார்வ அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா கேம்பெல்லில் நடந்தேறியது. சமீபத்தில் இயற்கைச் சீற்றங்களால் அவதிப்பட்ட சீனா, மியான்மர் (பர்மா) மக்களுக்கு அஞ்சலி செலுத்திக் கூட்டம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அமைப்பின் வழிநடத்துனர்கள் குறிக்கோள், இன்றைய நிலை, வருங்காலத் திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினர்.

சிறப்பு விருந்தினர்களான சங்கரா கண் அறக்கட்டளையின் (SEF) நீண்ட காலப் புரவலர், முன்னாள் SVI மேலாண்மை இயக்குநர், WeReachOut-ன் ஆலோசனைக் குழுவின் மூத்த உறுப்பினர் ஆகியோர் WeReachOut-ன் தனித்தன்மை வாய்ந்த சேவையின் சிறப்பையும் அதனால் பங்கேற்போரின் வாழ்வில் வெளிப்படும் அர்த்தத்தின் சிறப்பையும், பங்குபெற்றோரின் சிந்தனையைத் தூண்டும் விதமாகப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக அமைப்பின் தலைவர், இரண்டு குறிப்பிட்ட மாணவர் களின் வாழ்வில் எவ்வாறு WeReachOut மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பதை உதாரணங்களோடு விளக்கினார்.

பின்னர், கலைநிகழ்ச்சிகளும், மாயாஜால நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்வில் பங்கேற்ற சில மாணவர்கள் தமது எண்ணங்களை எடுத்துரைத்தனர்.

சில தன்னார்வத் தொண்டர்களால் தொடங்கப்பட்ட WeReachOut அமெரிக்காவில் ஒரு 501(C)(3) அங்கீகாரம் பெற்ற லாப நோக்கற்ற தன்னார்வக் குழு. இது இந்தியாவில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவுகிறது. கடந்த சில ஆண்டுகளில் அனாதைகளுக்கு உதவுதல், சுனாமியால் இடர்ப்பட்டோருக்கு உதவுதல் எனப் பல சேவைகளைச் செய்துள்ளது. தற்போது வறியவர்களுக்குக் கல்விபெற உதவி வருகின்றது.

மேலும் அறிய: www.wereachout.org
தகவலுக்கும், சேர்ந்து பணிபுரியவும்: contact@wereachout.org

சுந்தர் வின்சென்ட்

© TamilOnline.com