ஜூலை 2008 : வாசகர் கடிதம்
கரிச்சான் குஞ்சு (எழுத்தாளர், தென்றல், மே 2008) நல்ல அறிமுகம். அவரது முக்கியப்பணிகளில் ஒன்று, தேபிபிரசாத் சட்டோபாத்யாயாவின் what is living and what is dead in indian philosphy என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தது. இவர் குறித்துத் திண்ணையில் வெ.சா. எழுதிய அறிமுகம் இவரது மற்றொரு பரிமாணத்தைக் காட்டும். அவரது இறுதி நாட்களில் 5 வருடங்கள் அவருடன் பழகியவன் என்ற முறையில், ஒரு மிகச்சிறந்த மனிதர் மற்றும் மனிதாபிமானி. தத்துவ உரையாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வெ.சா.வின் இந்த அறிமுகம் சிறப்பாக அவரது மற்றொரு பரிமாணத்தைத் தரும்.

http://www.thinnai.com?module=displaystory&story_id=60703299&format=html

ஜமாலன், சவூதி அரேபியா (மின்னஞ்சலில்)

*****


அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியின் புகழை எடுத்தியம்பாத இதழ்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு அவரது புகழ் அண்டம் முழுதும் பரவியுள்ளது. அவரது மதுரை பிரம்மஸ்தான கோவிலுக்கு அடிக்கடி சென்று வருடம் ஒருமுறை அம்மாவின் தரிசனம் மற்றும் அன்பைப் பெற்றிருக்கிறேன்.. உலகமெலாம் ஒரே மக்கள் என்ற உலகளாவிய அன்பு அம்மாவினுடையது. அம்மா நீடுழி வாழ இந்த எளியவனின் பிரார்த்தனைகள்.

ஜெயக்குமார் ஸ்ரீனி, கட்டார் (மின்னஞ்சலில்)

*****


தென்றலின் ஒவ்வோர் இதழும் புதுப் பொலிவுடனும் புதுமையான படைப்புகளுடன் வளர்ந்து வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.

டாக்டர் கிருஷ்ணகுமார் அவர்களுடன் நேர்காணல் மிக நன்று. யார் அதிகமாகச் சொத்து (material wealth) சேர்த்து வைத்திருக்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என்ற போலியான ஓர் இலக்கணம் வேகமாக வளர்ந்துவரும் இன்றைய நச்சுச் சூழலில், திரைகடலோடி வந்து தம் உழைப்பில் சம்பாதித்த திரண்ட சொத்துகளை விற்று அமெரிக்காவில் அன்னை பராசக்திக்குக் கோவில் நிர்மாணித்துள்ள டாக்டர் கிருஷ்ணகுமாரின் இறைத்தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது. 'இரை தேடுவதோடு இறையையும் தேடு' என்ற உயர்ந்த சித்தாந்தத்திற்கு ஒரு படி மேலே போய், தேடிய செல்வத்தை இறைவனுக்கு அர்ப்பணித்து வரும் டாக்டர் கிருஷ்ணகுமாரைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்துவைத்த தென்றலுக்கு நன்றி.

பணிநிமித்தம் இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு முக்கியத் தலைவர்கள், பிரமுகர்களுடன் பணியாற்றி வந்தபோதும், 1975ல் கரூர் அருகே சந்தித்த விஸ்வநாதபுரி சொக்கலிங்கம் அவர்களது பேருதவிகளை நினைவுகூர்ந்து, அவரைத் தந்தையாக ஏற்று கரியாலி எழுதிய செய்திகள், எழுதியவரின் செய்நன்றி மறவா பெருங்குணத்தைப் பிரதிபலிக்கின்றன.

'தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் கேட்கும் வகை செய்யல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும் தென்றலின் தமிழ்ப்பணி வாழ்க, வளர்க.

சண்முகம் பெரியசாமி, நியூயார்க்.

© TamilOnline.com