வாகனத்துக்கு ஒரு நாள் ஓய்வு
உங்கள் காருக்கு ஒரு நாள் ஓய்வு கொடுங்கள் என்கிறார் ப்ரீமான்டில் (கலி.) எட்டாம் வகுப்பு மாணவியான ஜெனிஃபர் சேகர். அதற்குக் காரணம் உண்டு.

'700 மில்லியன் கார்கள் ஓராண்டில் 2.8 பில்லியன் டன் எடையுள்ள கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. ஒரு நாளில் ஒரு மில்லியன் கார்கள் வெளிவிடும் கரியமில வாயுவின் எடை 10,000 டன்' என்கிறார் ஜெனிஃபர். அதனால் இதைப் படிக்கும் எல்லோரும் அக்டோபர், 4, 2008 அன்று வாகனம் எதையும் வெளியே எடுக்கக்கூடாது. அத்தோடு, உங்கள் நண்பர்களுக்கும் இதைச் சொல்லி அதை ஓய்வு நாளாக்க வேண்டும்.

இதற்காக ஜெனிஃபர் 'A Day of Rest (ADOR)' என்று ஒரு லாபநோக்கற்ற சேவை அமைப்பையே ஏற்படுத்தியிருக்கிறார். இதற்கு நீங்கள் ஒன்றும் செலவு செய்ய வேண்டியதில்லை (உண்மையில் அன்றைக்கு நீங்கள் வெளியே போனால் கேஸுக்கும் பிறவற்றுக்கும் செய்திருக்கப் போகும் செலவு மிச்சம்).

அஹிம்ஸையை வளர்க்கும் பொருட்டாக காந்திஜி ஒருநாளை ஓய்விலும் பிரார்த்தனையிலும் செலவிடச் செய்தார். ஜெனிஃபருக்கு இதிலிருந்து பிறந்ததுதான் இந்த எண்ணம். இந்த முயற்சியில் இந்தியர்கள் முன்னோடிகளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

www.adayofrest.org என்ற வலைதளத்துக்குப் போய் உங்கள் ஆதரவை அங்கே தெரிவியுங்கள். அக்டோபர் 4 அன்று வீட்டை ஒட்டடை அடிக்கலாம், புல் வெட்டலாம், புதிதாக ஏதாவது சமைத்து மனைவி குழந்தைகளுக்குப் போடலாம். எரிபொருள் வாகனம் எதிலும் வெளியே போகக்கூடாது, அவ்வளவுதான்.


© TamilOnline.com