தமிழ் புத்தாண்டு விழா : கொலராடோ தமிழ்ச் சங்கம்
ஏப்ரல் 19, 2008 அன்று கொலராடோ தமிழ்ச் சங்கம் தனது தமிழ்ப் புத்தாண்டு விழாவை அரோராவிலுள்ள (கொலராடடீ) ரேஞ்ச் வியூ உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் கொண்டாடியது. 450 பேர் பங்கேற்ற விழாவில் கடவுள் வாழ்த்துப் பாடியவர்களில் 2 வயதுக் குழந்தையும் அடக்கம்.

'செந்தமிழ் நாடென்னும் போதினிலே' என்ற தேசீயக் கவிஞன் பாரதியில் பாடல்முதல் பழைய, புதிய திரைப்படப் பாடல்கள்வரை பின்னணியில் ஒலிக்க, மேடையில் அரங்கேறிய நடனங்கள் மேடையை ஜொலிக்க வைத்தன. இவை போதாதென்று டென்வரில் தாரகைகளான ப்ரியா ஹரிஹரன், காயத்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் தினகர் ஆகியோர் தமது 'ராகத்திலிருந்து ராஜா வரை' நிகழ்ச்சிமூலம் இளையராஜாவின் அசுர சாதனைக்கு, வீணை, வாய்ப்பாட்டு, வயலின் ஆகியவற்றின் வழியே ஒரு செவ்வியல் அஞ்சலி செலுத்தினர்.

உள்ளூர்த் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 'அமெரிக்காவில் திருவிளையாடல்' நாடகம் வழியே தமது 'தங்கிலீஷில்' நாகேஷின் தருமி-இறையனார் காட்சிக்கு கலகலப்பான மற்றொரு வடிவம் கொடுத்தனர். சங்கத்தின் தலைவர் ரகுராமன் 'டென்வர் பகுதியில் தமிழ்ச் சமுதாயம் வளர்ச்சியுற்று வருகிறது. சங்க நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற் கிறார்கள். நமது நிகழ்ச்சிகளின் தரமும் மேம்பட்டு வருகிறது' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

டென்வர் சென்னையின் சகோதர நகரமாகும். 2004 சுனாமியின்போது தமிழ் நாட்டின் துயர்துடைக்கும் முயற்சிகளுக்காக 75,000 டாலர் நிதி திரட்டி உதவியது. மீண்டும் டென்வர் சகோதர நகரங்கள் அமைப்புடன் தமிழ்ச் சங்கம் சேர்ந்து, உதவும் கரங்கள் அமைப்பு சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைக்கவிருக்கும் ஒரு மருத்துவ விடுதிக்காக நிதி திரட்ட உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.tamilcolorado.org/

© TamilOnline.com