விஜயகாந்தின் வெற்றி முரசு
யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனி ஆளாகத் தமிழகம் முழுவதும் எட்டு மாதங்களாகப் பிரசாரம் மேற்கொண்டார் நடிகர் விஜயகாந்த். அவருக்குக் கிடைத்துள்ள வாக்குகள் அவரை உற்சாகம் கொள்ள வைத்துள்ளன.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் 232 இடங்களில் போட்டியிட்டது விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி. பா.ம.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட விருத்தாசலத்தில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்றது பா.ம.க. வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதன்முறையாகக் களமிறங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் சுமார் 8.39 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

விஜயகாந்தின் வரவு தமிழகத்தில் முதன்முதலாகக் கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டது என்றே அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கும் இவரது கட்சி ஒரு காரணம்.

விஜயகாந்திற்கு விழுந்தது அவருக்கு ஆதரவு வாக்குகளா அல்லது இரு கழகங்களின் மேல் அதிருப்தி அடைந்தவர்களின் வாக்குகளா என்று தெரியவில்லை. மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

தேர்தலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்புதான் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு அதிக வாக்குகள் விழுந்திருப்பது விஜயகாந்த் என்ற தனிப்பட்ட மனிதரின் கடும் பிரசாரத்திற்குக் கிடைத்த வெற்றிதான். அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேசியக் கட்சியான பாரதிய ஜனதா படுதோல்வியைச் சந்தித்தது; அதன் கைவசம் இருந்த 4 சட்டமன்றத் தொகுதிகளும் போயின.

இந்த அஸ்திவாரத்தின் மேல் பெரிய கோட்டை கட்டுவாரா விஜயகாந்த்?

கேடிஸ்ரீ

© TamilOnline.com