கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 19, 2008 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை முன்னிட்டு 'அமெரிக்காவாழ் தமிழ் மக்களின் வாழ்வில் விஞ்சியிருப்பது அவதியா? ஆனந்தமா?' என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றத்தை நடத்தியது. நடுவர் இராஜம் குமார் நகைச்சுவையோடு பேச்சாளர்களை அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்தார். 'அவதியே' அணிக்கு சூரியநாராயணனும் 'ஆனந்தமே' அணிக்கு டாக்டர் வரலட்சுமியும் தலைமை தாங்கினர்.

ரமேஷ் நாச்சியப்பன், உமா சேகர், ஸ்ரீமதி செந்தில், சகுந்தலா கோபாலன் ஆகியோர் எதிரெதிர் அணிகளில் மிகத் திறனோடும், சுவையாகவும் தத்தம் வாதங்களை எடுத்துரைத்தனர். நடுவர் தமது தீர்ப்புரையில் அவதிகள் பல இருந்தாலும் மிஞ்சுவது ஒரு துளி அமிர்தமாம் ஆனந்தமே எனக் கூறினார். பத்து மாதச் சுமை அவதியாய் இருந்தாலும் கையில் தவழும் மழலை ஆனந்தமே என்று மேற்கோள் காட்டியது அருமை. பொங்கலையொட்டி நடந்த இந்தப் பட்டிமன்றத்தில் தீபாவளிப் பட்டாசுகள் வெடித்தன என்றால் மிகையாகாது.

வெங்கட் மூர்த்தி, கனெக்டிகட்

© TamilOnline.com