சென்னை புத்தகக் காட்சி
31வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 4 அன்று தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற்றது. கிட்டத்தட்ட 600 கடைகள், ஆறு நுழைவாயில்கள் என முன்னெப் போதும் இல்லாத அளவில் ஏற்பாடுகள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சிக்கு வந்திருந்தாலும் விற்பனை என்னவோ சென்ற ஆண்டை விடக் குறைவுதான். வழக்கம்போல் கதை, கவிதை, சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், ஆன்மிகப் புத்தகங்கள் என வெளிவந்திருந்தாலும், இந்தமுறை தமிழ் மொழி பற்றிய ஆய்வு நூல்கள் சில வெளி வந்திருந்ததையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் நூல் வெளியாகி இருக்கிறது. பன்மொழி அறிஞர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எழுதிய History of the Tamils என்னும் நூலின் தமிழாக்கமான தமிழர் வரலாறு (கி.பி. 600 வரை) என்னும் நூலைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் அனைத்து நூல்களும் 24 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கிழக்கு பதிப்பகம் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களையும், யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளையும் முழுமையாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. மேலும் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சா.கந்தசாமி போன்ற தேர்ந்தெடுத்த சிறுகதை ஆசிரியர்களின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை ஒலிப்புத்தகமாகவும் கிழக்குப் பதிப்பகம் கொண்டு வந்துள்ளது. பங்குச் சந்தை பற்றிய நூல்களும் வெளியாகி இருக்கின்றன. அதுபோக கலை, அரசியல், இலக்கியம் என பல்வேறு தலைப்புகளில் பல நூல்கள் வெளியாகி உள்ளன. 'நான் வித்யா' என்ற பெயரில் வெளியாகி இருக்கும் திருநங்கையின் சுயசரித நூல் மிக முக்கியமானது. தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மூன்று மொழிகளில் அது வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை புத்தகக் காட்சியில் பொதுத் தகவல்கள் பற்றிய நூல்களும், சிறுவர் நூல்களும், கல்வி தொடர்பான புத்தகங்களும் அதிகம் விற்பனையானதாகக் கூறப்படுகின்றது. 749,000 வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வந்து சென்றதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அரவிந்த்

© TamilOnline.com