தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது
இலக்கியம், ஆன்மிகம், சமூகசேவை எனப் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறது புதுக்கோட்டை மாவட்ட இலக்கியப் பேரவை. நமது தென்றல் பத்திரிகையின் இணையாசிரியரும், எழுத்தாளருமான அரவிந்த் சுவாமிநாதனுக்கு 'எழுத்துச் சிற்பி' என்ற விருதினை இந்த ஆண்டு வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை கம்பன் கழகத் தலைவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கமலா திரையரங்கு அதிபர், மீனாட்சி மைந்தன் வி.என். சிதம்பரம், குழந்தை இலக்கியச் செல்வர் பரசுராம் வெங்கட்ராமன், இளம்வள்ளல் எஸ். சின்னப்பா உட்படப் பல சான்றோர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் பல்துறைச் சான்றோர்கள் 33 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களின் சாதனை வரலாறும் 'வியர்வையின் வெற்றிகள்' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. நூலைத் திருச்சி மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான் வெளியிட, இந்திராகாந்தி கல்லூரி முதல்வர் மீனா பெற்றுக் கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட இலக்கியப் பேரவைத் தலைவர் 'சொல்லருவி' முத்துசீனிவாசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவர் இதுவரை புதுக்கோட்டை வாழ் சான்றோர்கள், சாதனையாளர்கள் 286 பேரைப் பற்றிய ஏழு நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இலக்கியப் பணிக்காக ஆர்.எம்.வீ., நல்லி குப்புசாமிச் செட்டியார், குன்றக்குடி அடிகளார், முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் நடராஜன் உட்படப் பலரது பாராட்டுக்களைப் பெற்ற இவர், புதுக்கோட்டை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் (மியூசியம்) தலைமை எழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பா.சு. ரமணன் என்ற புனைபெயரில் அரவிந்த் சுவாமிநாதன் எழுதிய 'வரம் தரும் அன்னை', 'சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்', 'குருதரிசனம்', 'ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்', 'அருட்பிரகாச வள்ளலார்' போன்ற நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.

இவரது நூல்களை இணையம் மூலம் வாங்க:

www.vikatan.com
www.anyindian.com
www.chennailibrary.com

© TamilOnline.com