ஜனவரி 2008: வாசகர் கடிதம்
தென்றலின் டிசம்பர் 2007 இதழில், எனக்கு மிகவும் பிடித்த கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணனின் நேர்காணல் சிறப்பாக இருந்தது.

காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலின் தொட்டாச்சாரியார் சேவை பற்றி விளக்கமாக எளிய நடையில் அலர்மேலு ரிஷி தொகுத்து வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது.

அரவிந்த் எழுதியிருந்த 'கலைஞர்கள் வாழ்விலே' சிறப்புப் பார்வை அம்சம். பாராட்டுக்கள்! இசைகலைஞர்களின் படங்களும் பிரமாதம். படங்களுக்குக் கீழே ஒவ்வொரு இசைக்கலைஞரின் பெயரையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சிறுகதைகள் 'மானுடம் வாழுதிங்கே' மனிதாபிமானத்தையும், 'திக்குத் தெரியாத நாட்டில்' நாட்டின் மேல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய பற்றையும் வெளிக்காட்டுவனவாக அமைந்திருந்தன.

பிரபல ஓவியர் தாணுவின் இழப்பு ஓவிய உலகத்துக்கும், கேலிச் சித்திரத்தினை ரசிப்பவர்களுக்கும் இழப்பு. அவரது படத்தை வெளியிட்டுள்ளீர்கள். நன்றி.

டிசம்பர் மாதத் தென்றல் மிகவும் புத்துணர்ச்சியுடன், புதுப்பொலிவுடன், சிறு மாற்றங்களுடன் வெளிவந்திருக்கிறது. தென்றல் குழுவினருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.

பா. தமிழ்வேந்தன், மலேசியா.

*****


ஆகஸ்டு 2007 முதல் நான் தென்றல் இதழை வாசித்து வருகிறேன். அருமையாக இருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் ஆங்கிலக் குறுக்கெழுத்துப் புதிர் போட்டு வருகிறேன். ஆனால் தென்றலில் மட்டும்தான் என் தாய் மொழியில் புதிர் தீர்ப்பதை ரசிக்கிறேன். நவம்பர் மாதம் புதிர் மன்னர் பட்டியலில் இடம் பெற்றேன். டிசம்பரிலும் இடம்பெற ஆசைப்படுகிறேன்.

முரளி சுவாமிநாதன், மின்னஞ்சலில்

*****


நவம்பர், டிசம்பர் மாதத் 'தென்றல்' இதழ்களை வாசித்தேன். உயர்வான எழுத்துக்கள்; வெகுவாய் ரசித்தேன்.

என்னை இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது நவம்பர் இதழில் வெளிவந்த Dr. சுதா சேஷய்யன் நேர்காணல் ஆகும்.

1972 முதல் 1990 வரை, சென்னை மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். அப்போது, சுதா சேஷய்யன், MBBS மற்றும் MS பட்டங்களுக்காக என்னிடம் மாணவியாகப் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு அதே கல்லூரியில், அதே துறையில், என்னோடு சக, உதவி ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவருக்குத் தமிழ்-ஆங்கில இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டை உணர்த்தும் விதமாக ஒரு சம்பவம் சொல்கிறேன்.

வகுப்பில், முதல் 5-10 நிமிஷங்களுக்குக் குட்டிக் கதைகள், முக்கிய பொது அறிவு சம்பந்தமான விஷயங்கள், மருத்துவக் 'கடி ஜோக்கு'களைக் கூறி, வகுப்பைச் சற்றுக் கலகலப்பாக்கிவிட்டு, அதன் பின்னரே பாடத்தை நடத்துவது என் வழக்கம். ஒரு முறை, கரும்பலகையில், 'The woods are lovely, dark and deep, I have miles to go before I sleep,' என்ற கவிதை வரிகளை எழுதிவிட்டு, 'இதனை எழுதிய கவிஞர் யார்?' என்று கேட்டேன். சுதா சேஷய்யன்தான் எழுந்து பதில் சொன்னார், 'இவை அமெரிக்கக் கவிஞர் Robert Frost எழுதிய வரிகள்: பண்டித நேருவுக்குப் பிடித்தமான வரிகள்' என்றார்.

Dr. ரா. அனந்தராமன், M.S., டப்ளின்

© TamilOnline.com