ஓயாத மருத்துவச் சர்ச்சை
'திரைப்படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை அனுமதிக்கக் கூடாது. சிகரெட், பான் போன்றவை உபயோகிப்பதைத் தடுக்க வேண்டும்' என்று அடிக்கடி மக்கள் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை அறிவிப்பவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ். இந்த முறை அவர், 'மருத்துவ மாணவர்கள் கட்டாயமாக கிராமப் புற சேவை செய்தாக வேண்டும். அதற்காக மருத்துவப்படிப்பு ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தப்படும்' என்று புதிய அறிவிப்பை வெளியிட, அது புதிய போராட்டத்துக்கு வித்திட்டுவிட்டது. இந்தியா முழுவதிலும் மருத்துவ மாணவர்கள் கல்விக்கால நீட்டிப்பை எதிர்த்து உண்ணாவிரதம், மறியல் என்று போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். 'நாங்கள் கல்வியை முடித்தபின் எங்களுக்கு கிராமப்புறத்தில் பணி நியமனம் செய்யுங்கள், நாங்கள் போகிறோம்' என்கிறார்கள் மாணவர்கள். இந்நிலையில், மாணவர்களைப் போராடுமாறு சில அரசியல் கட்சிகள் தூண்டி வருகின்றன என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட, கம்யூனிஸ்ட்டுகள் அதனை இல்லையென்று மறுக்க, பிரச்னை மேலும் சிக்கலானது. ஆனாலும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ மனை, டெல்லியில் இருக்கும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (AIIMS) ஆகியவற்றின் நிர்வாகங்களில் புகுந்து அவர் செய்திருக்கும் குழப்பங்கள் நாட்டுக்கு நன்மையைத் தராது.

அரவிந்த்

© TamilOnline.com