கலைஞர்கள் வாழ்விலே
அது இசையுலகின் ஜாம்பவான்கள் குழுமியிருந்த சபை. சபையில் நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை கச்சேரி செய்து கொண்டிருந்தார். முன்வரிசையில் பெரிய வித்வான்கள். அவர்களோடு அந்தப் பெண்மணியும் அமர்ந்திருந்தார். அவரும் புகழ்பெற்ற இசைக் கலைஞர்தான். ஆனால் மிகமிகக் கண்டிப்பானவர். இசையைப் பொறுத்தவரையில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளாதவர். பாரம்பரிய முறையையே பின்பற்ற வேண்டும் என்ற தீவிர கொள்கை உடையவர். தோடிக்குப் புகழ்பெற்ற பிள்ளை அப்போது தர்பாரில் கோலோச்சிக் கொண்டிருந்தார். இனிமையான இசையில் அனைவரும் கட்டுண்டு கிடந்த சமயம். சட்டென்று அந்தப் பெண்மணியின் முகம் மாறியது. சடாரென எழுந்தவர், வேகமாகச் சபையைவிட்டு வெளியேறத் தொடங்கினார். கூட இருந்த ஜாம்பவான்கள் பதறிப் போயினர். அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்தனர். மேடையில் வாசித்துக் கொண்டிருந்த பிள்ளையின் முகமோ சுண்டிப் போயிற்று. காரணம் இதுதான். தர்பார் ராகத்தில் வாசித்துக் கொண்டிருந்த பிள்ளை, அதில் சற்றே 'நாயகி' ராகத்தையும் கலந்து விட்டார். அது, அந்தப் பெண்மணிக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்து விட்டது. அவர்தான் பாரம்பரிய முறைகளை மிகக் கடுமையாகப் பின்பற்றுபவர் ஆயிற்றே! நாதஸ்வரச் சக்ரவர்த்தியானாலும் அவர் செய்த புதுமையை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிள்ளையோ சமாளிக்கும் குரலில், 'என்ன தர்பாரில் நாயகிக்குக் கொஞ்சம் கூட இடமே இல்லையா என்ன?' என்றார். பின்னர் மீண்டும் வாசிக்கத் தொடங்கினார் சுத்தமான தர்பார் ராகத்தில்.

அந்த அளவுக்கு இசையின் மீது அளவற்ற பற்று கொண்டவர் அந்தப் பெண்மணி. ராகம், ஸ்வர சுத்தமாகத்தான் வாசிக்க வேண்டும், பாட வேண்டுமே தவிர, நம் இஷ்டத்திற்கு மாற்றிப் பாடக் கூடாது என்பது அவரது எண்ணம். தனது கச்சேரிகளில் அதையே அவர் பின்பற்றி வந்தார். கச்சேரி பார்க்க வந்திருப்பவர், தங்களுக்குள் குசுகுசுவென்று பேசினாலோ, துண்டுச் சீட்டை அனுப்பி ஏதேனும் பாடலைப் பாடுமாறு கோரிக்கை வைத்தாலோ, அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. தான் பாடுவதை உடனே நிறுத்தி விடுவார். தனது ஏழாவது வயதிலேயே கச்சேரி செய்த பெருமைக்குரியவர். வாய்பாட்டில் மட்டுமல்ல; வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். கச்சேரியில் வீணையை வாசித்துக் கொண்டே பாடும் திறமை மிக்கவர். இசையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர். பாலசரஸ்வதி என்ற நாட்டிய மாமேதையை இந்த உலகுக்கு அளித்த பெருமைக்குரியவர். மாபெரும் ஜாம்பவான் களால் இசை மேதை என்று போற்றப்பட்டவர். அவர் யாரென்று தெரிகிறதா?

அவர்தான் வீணை தனம்மாள்.

*****


அந்த தம்பதிகள் இருவருமே இசையில் நன்கு தேர்ந்தவர்கள். 'தேவர் நாமா' என அழைக்கப்படும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளைப் பரப்புவதில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கும் இசையைக் கற்பித்து வந்தார்கள் என்றாலும் அவளும் தங்களைப் போல இசைத் துறைக்கு வரக் கூடாது, நன்கு படித்து டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் அவளை நகரத்தில் உள்ள மிகப் பெரிய ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். சிறுமியும் நன்கு பயின்று வந்தாள் ஆனால் குடும்பத்தில் தான் வறுமை தாண்டவமாடியது. தந்தை இசை கற்பித்து வரும் சொற்ப வருவாயில் குடும்பம் நடத்த முடியவில்லை. தாய்க்கும் உடல் நலமில்லாமல் போனது. ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற பீதியால் மக்கள் குடும்பம் குடும்பமாக நகரை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். நாளடைவில் அதனால் தந்தையின் வருவாயும் தடைப்பட்டது.

என்ன செய்வாள் சின்னப் பெண்? குடும்ப பாரம் முழுவதும் அவள் தோள்களில். அதனால் இசைக் கச்சேரி செய்து, அதன் மூலம் வாழ்க்கை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தாள். தனது டாக்டர் கனவுகளை மூட்டைகட்டி வைத்தாள். கச்சேரி செய்ய ஆரம்பித்தாள். அவளுக்கு ஏற்கனவே நல்ல குரல்வளம் இருந்ததாலும் அவரது குருநாதர் ஜி.என்.பி. நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததாலும் நிறையக் கச்சேரி வாய்ப்புகள் வந்தன. தனிக்கச்சேரி செய்ய ஆரம்பித்தாள். வாய்ப்புகள் பெருகின. பதிமூன்று வயதிலேயே அவள் தனித்துப் பாடி இசைத்தட்டுகளும் வெளியாகின. அவளுக்கு நல்ல புகழும் வர ஆரம்பித்தது. எம்.கே.தியாகராஜ பாகவதர் அந்தப் பெண்ணின் குரலால் கவரப்பட்டு, தான் நடித்த திரைப்படத்தில்; பின்னணி பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். அதுமுதல் திரைப்படப் பின்னணிப் பாடல்கள் பாடுவதிலும் அந்தப் பெண் ஜொலித்தாள்.

அதே சமயம் கர்நாடக இசையிலும் நிகரற்றவராக விளங்கினார். திருப்பாவை, திருவெம்பாவை போன்றவற்றை பாவத்துடன் பாடினார். பல கலைஞர்களை உருவாக்கினார். பல பக்கவாத்தியக் கலைஞர்கள் வாழ்வில் உயர்வுபெற உதவி செய்தார். நல்லதொரு சீடர் பரம்பரையை உருவாக்கி னார். எந்தவிதப் பின்புலமுமில்லாமல் உழைப்பாலேயே உயர்வடைந்த, தந்தையின் பெயரே முதல் எழுத்தாகப் (இனிஷியல்) போடப்பட்டு வந்த காலத்தில் அதற்கு மாறாகத் தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட்டுக் கொண்ட, இசைத் துறையில் தனக்கென தனிப்பாதை வகுத்த, அந்த சாதனைப் பெண்மணி யாரென்று தெரிகிறதா?

அவர்தான் எம்.எல்.வி எனப்படும் மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி.

அரவிந்த்

© TamilOnline.com