உடலும் உள்ளமும்
உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. பசி என்பது உடலுக்கு ஏற்படும் தேவை. பசி ஏற்பட்டு வெகுநேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் உள்ளமும் தளர்கிறது. நாம் உண்ணும் உணவின் தன்மைக்கு ஏற்ப உள்ளத்திலும் மாற்றம் ஏற்படுவதைத் தற்கால மருத்துவம் சொல்கிறது. அதனால் திருமூலரும்

உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திறம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்ப்போம் உயிர் வளர்ப்போமே

என்று கூறினார். மெய்ஞ்ஞானம் வேண்டும் தவசிகளுக்கே உடல்நலத்தைப் பேணுவது அவசியமென்றால் நம் போன்றோருக்குச் சொல்லவா வேண்டும்!

உடலின் மூலம் மனதின் நலம்

'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்பது பழமொழி. அதாவது நலமான உடல் என்னும் சுவர் இருந்தால் தான் அதன்மீது நல்வாழ்க்கை என்ற சித்திரத்தை வரைய முடியும். வழக்கமாக சரிவிகித உணவைப் பற்றிக் கூறுகையில் எவ்வாறு தானியங்கள், பழங்கள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பருப்பு வகைகள், கடலைகள், பால் ஆகியவற்றைப் போதிய அளவு உண்பதனால் மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள் ஆகியவற்றைப் பெறமுடியும் என்பதை விளக்குவது வழக்கம். தவிர உடலில் அதிக காலம் தங்கியிராத வைட்டமின்களும் அவசியமாக இருக்கின்றன.

ஓட்ஸ், வாழைப்பழம், மீன் ஆகியவற்றில் மனதின் சோர்வை அகற்றி உற்சாகத்தைத் தரும் குறிப்பிட்ட ரசாயனப் பொருள் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை அறிந்துகொள்வதை விட முக்கியமானது என்னவென்றால் நாம் காரணமின்றி அலுப்பாக உணரும்போது இவற்றில் ஏதாவதொன்றை உட்கொண்டு உற்சாகம் பெறுவதுதான். ஆனால் காபி, புகையிலைப் பொருள்கள் போன்ற தாற்காலிகமான உந்துதல் தரும் பொருள்கள் நம்மை அடிமையாக்குவதோடு நம்மை கா·பீன் என்ற நச்சுப் பொருளுக்கு அடிமையாக்கி நாளாவட்டத்தில் உடல் நலத்தைச் சிதைக்கிறது. சிகரெட் நம்மைச் சுற்றியிருப்பவருக்கும் தீங்கு விளைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

##Caption##உடலில் ஒரு துள்ளல் வரவேண்டுமானால் தவறாமல் தேகப்பயிற்சி செய்ய வேண்டும். அது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல் தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்தி அதிகப்படிக் கொழுப்பு ஒரே குறிப்பிட்ட இடத்தில் சேராமல் பார்த்துக்கொள்கிறது. சரியான வழிகாட்டியின் துணையோடு யோகப் பயிற்சி மற்றும் பிராணாயாமம் எனப்படும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சியைப் பழகித் தொடர்ந்து செய்வது உடலுக்கு, மனதுக்கு, அறிவுக்கு, ஆன்மிகத்துக்கு என்று எல்லாவற்றுக்குமே பெருந்துணை செய்யும். யோகம் மற்றும் பிராணாயாமத்தில் பல வகைகள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிலவற்றைச் செய்யக்கூடாது, இதய நோய் உள்ளவர்கள் சிலவற்றைச் செய்யக்கூடாது என்று கட்டுப்பாடுகள் உள்ளன. ஆகவே ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற யோக, பிராணாயமப் பயிற்சிகளை செய்வதன் மூலம் மிகுந்த நன்மை அடையலாம்.

எல்லாவற்றையும் விட எளிய, யாவரும் செய்யக்கூடிய பயிற்சி நடத்தல்தான். காலை அல்லது மாலையில் ஓரிரண்டு மைல் நடக்கலாம். அதை 4 மைல்வரை அதிகரிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதைச் செய்தே ஆகவேண்டும். ஆனால் திடீரென்று ரத்தத்தில் குளூகோஸ் குறைந்தால் அதற்கேற்ப நடக்கும் தூரத்தைக் குறைக்க வேண்டும். இரண்டு உணவுக்கு இடைப்பட்ட வேளையில் கணக்கில்லாம நொறுக்குத் தீனி தின்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிப்ஸ், பாப்கார்ன், ஐஸ்கிரீம் ஆகியவற்றால் வயிற்றை அடைக் கக்கூடாது. உணவில் காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் பலக் குடல்நோய்களைத் தவிர்க்கலாம்.

நமது முன்னோர்கள் நமக்கு தமோகுணம், ரஜோகுணம், சத்வகுணம் என்று மூன்று இருப்பதாகக் கூறுகிறார்கள். அமைதி, ஆனந்தம், கருணை, அன்பு போன்றவற்றால் நிரம்பியது சத்வகுணம். ரஜோகுணம் கோபம், வேகம், பொறாமை, துடிதுடிப்பு, பேராசை போன்றவற்றின் ஒட்டுமொத்தம். சத்வகுணம் சோம்பேறித்தனம், தாமதம், அறியாமை, தூக்கம் போன்ற இருட் குணங்களால் ஆனது. நம் இந்த குணங் களின் கலவையாக இருக்கிறோம். ஆனால், ஒவ்வொருவரிடமும் இவற்றில் ஒரு குணம் தூக்கலாக் இருக்கிறது. அதனால்தான் முன்கோபி, சோம்பேறி, சாது என்றெல்லாம் மனிதர்களைப் பிரித்துப் பார்க்க முடிகிறது. போதைப் பொருட்களும், எருமைத் தயிரும், அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் நம்மைத் தமோகுண இருளில் தள்ளி விடுகின்றன. காரம், மசாலா போன்றவை ரஜோகுணத்தை மிகச் செய்கின்றன.

பசுந்தயிர், மிதமான காரம், உப்பு, புளிப்பு கொண்ட உணவு நம்மில் சாத்விகத்தை வளர்க்கிறது. மனிதரனைவரும் சத்வ குணத்தை நகர்வதன் மூலம் தம்மில் இருக்கும் இறைத்தன்மையையும் வெளிக் கொணர முடியும். அது இல்லாதவரையில் நாம் சமத்துவம் என்றெல்லாம் வார்த்தகளால் சொல்லிக்கொண்டு, அதன் பெயரால் வெறுப்பையும் பகைமையையும்தான் வளர்ப்போம். கோபத்தின் தீமை நாம் அறியாததல்ல. அது 'தன்னையே கொல்லும்' என்பார் வள்ளுவர். காரணம் பிறரை அன்னியமாக்குவதோடு, நமது உடல்நலத் தையும் அது கெடுக்கும். கோபம் குறைந்தால் தான் சத்வகுணம் வளரும். இதில் நாம் உண்ணும் உணவு பெரும்பங்கு வகிக்கிறது.

பொதுவாக இவற்றை நாம் படிக்கும்போது 'இதுதான் எனக்குத் தெரியுமே' என்று மனம் சொல்லிக்கொண்டே வரும். ஆனால், பெரிய சிப்ஸ் பாக்கெட்டைப் பிரிக்கும்போதும் மிகச் சவுகரியமாக மறந்துபோய்விடும். எனவே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொண்டு கடைப் பிடியுங்கள். பெரிய எழுத்தில் எழுதிச் சுவரில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். உடல்நலம் பேணுங்கள், உற்சாகமாக இருங்கள்.

மதுரபாரதி

© TamilOnline.com