சீண்டலுக்கு மாணவி பலி
கல்லூரி மாணவி பேர்ல் குப்தா தனது கல்லூரி வாசலிலேயே சீண்டலுக்கு பலியான சம்பவம் டெல்லி அரசுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த பேர்ல் குப்தா மீது வேகமாக வந்த ஒரு ஸ்கூட்டர் இளைஞன் வேண்டுமென்றே மோதி விட்டுச் செல்ல, இருவரும் கீழே விழ, அடுத்த நொடியிலேயே வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து பேர்ல் குப்தாவின் தலைமீது ஏறி இறங்க, அவர் அங்கேயே பலியானார். பேருந்து ஓட்டுநரும், ஸ்கூட்டர் இளைஞனும் உடனடியாகத் தப்பித்து ஓடிவிட்டனர். அருகிலேயே போக்குவரத்துக் காவலரின் கண்காணிப்புக் கூண்டு இருந்தும் அவர்கள் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை என்பதால் மாணவிகள் கல்வீச்சு, பேருந்து மறியல் எனப் போராட்டத்தில் குதித்தனர். தங்களில் ஒருத்தியை இழந்து சோகத்துடனும், கோபத்துடனும் மாணவிகள் போராடிக் கொண்டிருக்க, கடந்து சென்ற சில இளைஞர்கள் அப்பெண்களைப் பார்த்து ஆபாசமாக ஏதோ கூறியதால் பிரச்னை இன்னமும் சிக்கலானது. இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் பிரச்னை கட்டுக்குள் வந்தது என்றாலும் மாணவிகளிடையே இன்னமும் அமைதி திரும்பவில்லை.

அரவிந்த்

© TamilOnline.com