கிராமத்து மோதல்
நந்திகிராம். மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு அமைதியான கிராமம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. கல்கத்தாவிலிருந்து சுமார் 150 கி.மீ. தூரத்தில் உள்ள நந்தி கிராமம் தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 'கம்யூனிஸ்ட்களின் ஆளுகையில் உள்ள மேற்கு வங்கத்தில் நீதி செத்து விட்டது. அரசு சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது' என்று நீதிபதிகள் மிகக் கடுமையாக அரசைச் சாடுமளவுக்கு நிலைமை சீர்கேடாகி விட்டது. பிரச்னை இதுதான்: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் வேதியியல் தொழிற்சாலையை, இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த அரசு முனைந்தது. அதன் ஒரு கூறாக நன்கு விளையும் பல ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. கிராம மக்கள் ஒன்று திரண்டு அதனை எதிர்த்தனர். விளைவு துப்பாக்கிச் சூடு, கலவரம், வன்முறை. இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். எண்ணிக்கை அதிகமாகவும் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அரசோ இது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மம்தா பானர்ஜி மீது குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தேசிய சிறுபான்மை ஆணையத்தைச் சேர்ந்த குழுவினரை அனுப்பி, இது குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதி விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை!

அரவிந்த்

© TamilOnline.com