சர்வதேச நகரமாகும் மும்பை
இந்தியாவின் குறிப்பிடத்தக்க நகரங்களுள் ஒன்றாக விளங்குவது மும்பை. அதனை சர்வதேச நகரமாக ஆக்கும் பணிக்காக திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. மும்பையில் உள்ள தானே, நவி மும்பை, வசாய், விரார், ராய்காட் போன்ற பகுதி களையும் இணைத்து மேம்படுத்துவதற்காக 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. படிப்படியாக பத்தாண்டுகளில் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி சாலைப் போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்து, நீர்த்தடம் என அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப் பெற்று ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்துத் திட்டமாக மாற்றப்படும். ஒரு பயணி குறிப்பிட்ட இடத்திற்குப் பயணம் செய்ய அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டால் மேற்கண்டவற்றுள் எதை வேண்டுமானாலும் அடுத்தடுத்துப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்கை அடையுமாறு இந்த ஒருங்கிணைப்பு அமையும். மக்கள் நெரிசலைத் தவிர்ப்பதும், மும்பையை ஒட்டியுள்ள பல புறநகர்ப் பகுதிகளை நகரத்தோடு இணைப்பதும், சர்வதேசத் தரத்துடன் நகர வளர்ச்சிக்கு வித்திடுவதுமே இத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ் முக் தெரிவித்துள்ளார். இது முதலிலேயே சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ளதுதான். சென்னையில் யாருக்காவது இது காதில் விழுந்ததா?

அரவிந்த்

© TamilOnline.com