'பாலம்' கலியாணசுந்தரம்
நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கும் ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே (கிட்டத்தட்ட முப்பது லட்சத் திற்கு மேற்பட்ட தொகை) சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படிச் செய்தவர், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறவர், 'பாலம்' கலியாணசுந்தரம். சமூகசேவையில் தான் கொண்ட ஆர்வம் காரணமாகத் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வரும் இவர், தனது உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக ஓட்டலில் சர்வராக வேலைபார்த்து வாழ்க்கை நடத்தியவர்.

மே 10, 1940 அன்று பால்வண்ணநாதர்-தாயம்மாள் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் கலியாணசுந்தரம். பரம்பரையாகவே தேசப்பற்று மிக்க குடும்பம். தந்தை காந்திஜியின் கொள்கைகளில் ஈர்ப்பு உடையவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தியாகிகளைத் தன் வீட்டில் தங்க வைத்து ஆதரித்தவர். அவர் வழியில் வந்ததால் கலியாணசுந்தரமும் தேசபக்தி மிகுந்தவராகவும், காந்தியக் கொள்கைகளின் மீது அளவற்ற பற்று கொண்டவராகவும் விளங் கினார். தினமும் 7 கி.மீ. நடந்து தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தவர், பின் மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பாரதப் பிரதமரின் தேசியப் பாதுக்காப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்ற பெருமை யைப் பெற்றார். தன்னிடமிருந்த நகை களையும், தான் பெற்ற தங்கப்பதக்கத்தையும் நன்கொடையாக அளித்து காமராஜரின் பாராட்டைப் பெற்றார். பின் திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் 35 ஆண்டுகாலம் நூலகராகப் பணியாற்றிய கலியாணசுந்தரம், அப்போதும் கூடத் தன் சொந்தச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, எஞ்சியதைச் சமூகப் பணிகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

'அகவாழ்க்கை, புறவாழ்க்கை இரண்டுமே தூய்மையாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியமும், உடைமை இன்மையும் பொது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான விரதங்கள்' என்ற காந்திஜியின் கொள்கையை உளமார ஏற்று, திருமணமே செய்து கொள்ளாமலும், தன் மூதாதையர் களின் சொத்தை விற்றுக் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை பொதுநலனுக்கு வழங்கியும், எளிய வாழ்க்கை நடத்தினார் கலியாணசுந்தரம். அமெரிக்க அரசின் நாணயமாற்றுப் பரிசுத் தொகையாகக் கிடைத்த நிதி ரூபாய் முப்பது கோடியையும் சர்வதேசக் குழந்தைகள் பல்கலைக்கழக அமைப்புக்கு நன்கொடையாக வழங்கி விட்டார்.

'அக்காலத்தில் அந்நிய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் தியாகம் செய்தனர். தற்போது சுதந்திர இந்தியாவில் சகோதர மக்களின் நல்வாழ்விற்காக நீங்கள் எதைத் தியாகம் செய்யப் போகிறீர்கள்?' எனக் கேள்வி எழுப்பும் கலியாணசுந்தரம், வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழை மக்கள் அன்றாடம் எவ்விதம் வாழ்க்கை நடத்து கின்றனரோ அவ்வாறே எளிமையான வாழ்க்கை நடத்தி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னமேயே தன் கண்களையும், உடல் உறுப்புக்களையும் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கி விட்டார்.

##Caption##1953ஆம் ஆண்டில், தனது பதினான்காம் வயதில் ஏழை, எளிய குழந்தைகளின் நலனுக்காக 'நடராஜ நகர் இளையோர் சங்கம்' என்று அவர் நிறுவிய அமைப்பே இன்று பாலமாகப் பரிணமித்திருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், இரத்ததானம், ஊனமுற்றோர் மறுவாழ்வு, முதியோர் பாதுகாப்பு, இலவச திருமணம், இலவச சட்ட உதவி, ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு, இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி எனப் பல விதங்களில், கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாகச் சீரிய தொண்டாற்றி வருகிறது இவ்வமைப்பு. இதன் மூலம் சமுக சேவையாற்றி வரும் கலியாண சுந்தரத்தை காமராஜர், மன்மோகன் சிங், அப்துல்கலாம், கருணாநிதி, சி. சுப்ரமண்யம் போன்றோர் மட்டுமல்லாது, நெல்சன் மண்டேலா, பில் கிளிண்டன் என வெளிநாட்டுத் தலைவர்களும் பாராட்டியிருக்கின்றனர். தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இவரது பணிகளை ஊக்குவித் துள்ளன. இவரது பெருந்தன்மையான வாழ்க்கையைப் பற்றி அறிந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்தும், இவரை தனது தந்தையாகத் தத்து எடுத்துக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.

உலகளாவிய நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கான மறுவாழ்வுப் பணியை 'பாலம்' கலியாண சுந்தரம் தலைமையில் மேற்கொள்ள ஐ.நா.சபை அனுமதியளித்ததே அவரது தன்னலம் கருதாத் தொண்டுக்குச் சான்றாகும். குறிப்பாக, குஜராத் நிலநடுக்கத்தின் போதும், சுனாமி பாதித்த பின்பும் 'பாலம்' அமைப்பினர் செய்த உதவிகள் குறிப்பிடத்தகுந்தவை. பூகம்பத்திற்குப் பின் உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் இழந்து அகதிகள் போல் தமிழகத்தைத் தஞ்சமடைந்த வர்களைத் தத்தெடுத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் பாலம் அமைப்பு செய்தது. சுனாமி பாதித்த பகுதி களின் குழந்தைகள் நல்வாழ்விற்காக தனது உடல்நலம் சரியில்லாத நிலையிலும் மிகக் கடுமையாக உழைத்தார் கலியாணசுந்தரம். அவரது இத்தகைய தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க அரசு இவருக்கு Man of the Millenium விருது வழங்கி பெருமைப் படுத்தியது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழமும் Most Notable Intelluctual of the World என்ற பட்டத்தை வழங்கி இவரைப் பாராட்டி யிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் Outstanding People of the 20th Century என்ற கௌரவமும் கலியாணசுந்தரத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.

பணம் மட்டுமே உலகம் என்றெண்ணி இயந்திர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு 'பாலம்' கலியாணசுந்தரத்தின் வாழ்க்கை ஒரு பாடம்.

எந்தவித விளம்பரங்களுமின்றி தன்னலமற்ற சேவை ஒன்றையே தனது முழு நோக்காகக் கொண்டு பணியாற்றி வரும் பாலம் நிறுவனம், சேவை மனப்பான்மை கொண்டவர்களை தனது உறுப்பினராகச் சேர முழு மனத்துடன் வரவேற்கிறது.

தொடர்புக்கு:

அன்பு பாலம்,
எண் 1, நான்காவது பிரதானசாலை,
கஸ்தூரிபா நகர்,
அடையாறு, சென்னை 600020.
தொலைபேசி: + 9144 2440 2524
தொலைநகல்: + 9144 2440 2524
செல்பேசி: + 91 98402 18847
மின்னஞ்சல்: iro_india@rediffmail.com, anbupaalam@gmail.com

லண்டன் முகவரி:
PALAM,
112, Bickley Street,
London,
SW17 9NE, UK

அரவிந்த் சுவாமிநாதன்

© TamilOnline.com