தீபாவளி சினிமா
தீபாளி என்றால் 15 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகிற காலம் மலையேறிவிட்டது. இப்போது 5 படங்கள் ரிலீஸ் ஆனாலே பெரிது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று சினிமா உலகம் சரியில்லை. இரண்டாவது தியேட்டர்கள் இல்லை. தேவி காம்ப்ளக்ஸ், சாந்தம் காம்ப்ளக்ஸ், அபிராமி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ், சங்கம் காம்ப்ளக்ஸ் போன்ற ஐந்தாறு காம்ப்ளக்ஸில் படம் ரிலிஸ் ஆனால் தான் படத்துக்கு கெளரவம் என்ற நிலை.

ஆளவந்தான் தமிழகத்தில் உள்ள முக்கிய திரையரங்குகளையொல்லாம் மூன்று மாதத்துக்கு முன்பே ஒப்பந்தம் செய்துவிட்ட நிலையில் மற்ற படங்களுக்கு திரையரங்குகள் காலியில்லை.

இப்போதும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 8 படங்களில் நான்கு படங்கள் (அல்லி அர்ஜுனா, மஜ்னு, காசி, ரெட்) தீபாவளிக்கு கொஞ்ச நாள் தள்ளி போகலாம்.

நந்தா

'சேது' படத்துக்குப் பிறகு பாலா இயக்கியிருக்கும் படம். அஜீத்துக்காக ஒரு படம் செய்வதாக இருந்து அவருக்குக் கதை பிடிக்காமல் போனதால் இப்போது சூர்யா. சூர்யா தவம் போல இதில் கவனம் செலுத்தியிருக்கிறார். கடந்த இரண்டு வருடத்தில் வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இதிலேயே கவனமாக இருப்பது கதை மீது அவர் வைத்திருக்கும் நம்பிகைக்கு ஓர். எ.கா.

இது தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் பாசப் போராட்டம் என்கிறார் பாலா. 'பாலுமகேந்திராவுக்கு நான் உதவி இயக்குநர் மட்டுமல்ல; அவருடைய மகன் மாதிரி. அவர் அவருடைய மனைவிக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அதைத் தட்டி கேட்கும் உரிமை மகன் ஸ்தானத்தில் இருக்கும் எனக்கு இருக்கிறது'' என்று கூறியிருந்த பாலா, இப்படத்தில் கணவனால் புறக்கணிக்கப்பட்ட ஒரு மனைவியையும், அதனால் வெகுண்டெழும் மகனையும் பிரதானப்படுத்தியிருக்கிறார். லைலாவுக்கு இலங்கை அகதிப் பெண் பாத்திரம். யுவன் இசையமைத்திருக்கிறார்.

காசி

விக்ரமின் கனவு படம். சேது வெளியான நாளிலிருந்து இந்தப் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்துக் கொண்டிருந்தார். மலையாளத்தில் கலாபவன் மணி, காவ்யா மாதவன் நடித்திருந்தனர். வினயன் இயக்கியிருந்தார். தமிழில் வினயன் இயக்க கலாபவன் மணி நடித்த வேடத்தில் விக்ரம் நடிக்கிறார். நாயகியும் மாற்றமில்லை. பார்வை இழந்தவராக விக்ரம் நடிக்கிறார். பேசப்படும் பாத்திரமாக இருக்கும் என்று இப்போதே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளவந்தான்

கமல்ஹாசனின் 200 - ஆவது படம். அவர் நடித்த 20-ஆவது இரட்டை வேடப்படம். சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு பாலசந்தர் இயக்கத்தில் இப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார் கமல். ஆனால் இப்போது பாலசந்தரின் உதவி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மூலமாக இது படமாகியிருக்கிறது.

12 வயதிலேயே கொலைக் குற்றத்துக்காகச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட நந்தகுமார் மற்றும் அவருடைய தம்பி விஜயகுமார் ஆகிய இரு வேடத்தில் கமல் நடிக்கிறார். ஒருவர் குற்றவாளி. ஒருவர் காவலாளி (அதாவது போலீஸ்). ரவிணா டாண்டன், மனீஷா கொய்ராலா ஜோடிகள், பெண்களின் ரத்தத்தில் குளிக்க நினைக்கும் மனநோயாளியாக நடித்திருக்கிறார் நந்தகுமார். சங்கர் மகாதேவன் இசையமைத்திருக்கும் முதல் தமிழ்ப்படம்.

தவசி

விஜயகாந்த், செளந்தர்யா நடித்திருக்கிறார்கள். உதயஷங்கர் இயக்கியிருக்கிறார். நரைத்த மீசையோடு ஒரு விஜயகாந்தும் செளந்தர்யாவோடு நடனமாடிக் கொண்டிருக்கும் இளமையான ஒரு விஜயகாந்துமாக புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கதை? வெள்ளித்திரையில்.

அல்லி அர்ஜுனா

பாரதிராஜா தயாரிப்பில் சரண் இயக்கியிருக்கும் படம் மனோஜ். ரிச்சா பலோட் நடித்திருக்கிறார்கள். இசைப்புயல் மையம் கொண்டிருக்கும் படம். 'அல்லி அர்ஜுனா' என்ற பெயரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏவி.எம்.நிறுவனம் ஒரு படம் எடுத்தது. அதில் படப்படிப்பில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் வெளிச்சம் காரணமாக எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டே நடித்ததாகச் சொல்லுவார்கள்.

இதில் கட்டுக்கடங்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் மனோஜை தன் வசப்படுத்தும் அல்லி ராணி வேடம் ரிச்சாவுக்கு.

மஜ்னு

மஜ்னுவாக பிரசாந்தும் லைலாவாக ரிங்கி கண்ணாவும் நடித்திருக்கிறார்கள். இசை ஹாரிஸ் ஜெயராஜ். 'கண்ணெதிரே தோன்றினாள்' ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் படம். 'சி டி.வி.' தயாரித்துளூளது.

பார்த்தாலே பரவசம்

பாலசந்தர் சற்றே இடைவேளைக்குப் பிறகு வெள்ளித் திரைக்கு வந்திருக்கிறார். மாதவன் - சிம்ரன் - சிநேகா நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை.

முக்கோணக் காதல் கதைகள் எப்போதுமே உலக ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வந்திருக்கிறது. இதிலும் முக்கோணம் உண்டு. நடனக் கலைஞர் லாரன்ஸ¤க்கு முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாஜகான்

ஆர்.பி. செளத்ரியின் தயாரிப்பில் விஜய நடிக்கும் நான்காவது படம். மீனா ஒரே பாடலுக்குத் தோன்றி ஆடியிருக்கிறார். ''நான் மீனாவின் ரசிகன்'' என்று கூறி வந்த விஜய்க்கு தன் ஜென்ம ஆசை நிறைவேறிய சந்தோஷம். நாயகி ரிச்சா பலோட். இயக்கம் : ரவி.

ரெட்

'தீனா'வுக்குப் பிறகு அஜித் நடிக்கும் இரட்டை எழுத்துப்படம். இதுவும் அதிரடிப் படமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. இயக்கம்: சிங்கம் புலி. 'சிட்டிஜன்' அவருடைய எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்காததால் அவசர அவசரமாக - ரகசியமாக 'ரெட்'டை எடுத்து முடித்திருக்கிறார். அஜீத் படத்தில் அஜீத்தைத் தவிர வேறு யாருக்கும் இடமிருக்காது. இசை: தேவா.

இத்தனை படங்களையும் தீபாவளி லிஸ்டில் சேர்த்துகூ கொண்டால் ரசிகர்களுக்கு அஜீத், விஜய், விஜயகாந்த், விக்ரம், மாதவன், கே.பாலசந்தர், பாலா, சரண் ஆகியோர் இணைந்து கலக்கிய இனிய தீபாவளியாக இருக்கும். சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரின் குடும்பங்களில் இன்னும் சற்று கூடுதலான இனிய தீபாவளியாக இருக்கும்.

தமிழ்மகன்

© TamilOnline.com