துளிர் [சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ்]
தமிழின் மிகச் சிறந்த அறிவியல் பத்திரிகை என மத்திய மாநில அரசுகளால் பாராட்டப்பட்டிருக்கிறது 'துளிர்' பத்திரிகை. அது மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் மாத இதழ் எனவும் விருதுகளை பெற்றிருக்கிறது.

துளிர் பத்திரிகையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் இரண்டும் இணைந்து நடத்துகின்றன. 2001 நவம்பர் மாதத்தோடு துளிர் பத்திரிகைக்கு 15 வயது பூர்த்தியாகிறது. 1987 -இல் அகில இந்திய அளவில் விஞ்ஞானத்தை சாமான்ய மக்களுக்கு எடுத்துச் செல்வதற்காக அறிவியல் இயக்கம் சென்னை முதல் போபால் வரைக்கும் பயணம் மேற்கொண்டார்கள். அறிவியல் இயக்கத்தினரோடு கலைக் குழுவும் பயணமானது. சென்ற இடங்களிலெல்லாம் இந்தக் குழுவுக்குப் பயங்கர வரவேற்பு. மக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி அதுவும் குழந்தைகள் விஞ்ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும் போது சிரத்தையுன் கவனித்திருக்கிறார்கள். பலர் நீங்களே ஒரு விஞ்ஞானப் பத்திரிகை ஆரம்பியுங்கள். பல பேருக்கு உபயோகமாக இருக்கும் என்று கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றனர்.

விளைவு, சென்னை வந்ததும் அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கி விட்டனர். பத்திரிகை ஆரம்பிக்கலாம் சரி; யாருக்கான பத்திரிகை இது? கேள்விகள் எழுப்ப....கண்டிப்பாக இது குழந்தைகளுக்கான பத்திரிகைதானென முடிவெடுத்தார்கள். ஏனெனில் குழந்தைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானத்தைக் கற்றுத் தருதல் தான் உபயோகமாக இருக்கும் என நம்பினார்கள். இது நடந்தது 1987-இல்.

பத்திரிகை ஆரம்பித்தால், வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்விகளையெல்லாம் பொருட்படுத்தாமல் என் கடமை பணி செய்து கிடப்பதற்கே! என ஆரம்பித்து விட்டார்கள். முதல் பத்திரிகை 5,000 பிரதிகள் அடித்து அத்தனையும் உடனுக்குடன் விற்றுப் போனது. துளிர் பத்திரிகையைப் பொறுத்தவரை அறிவியல் இயக்கத் தோழர்களே அதன் விற்பனைப் பிரதிநிதிகள். இதுவரை துளிரும் யாருக்கும் விளம்பரம் செய்ததில்லை. துளிருக்கும் யாரும் விளம்பரம் செய்ததில்லை. அந்தளவிற்கு விளம்பரங்களே இல்லாமல் கடந்த பதினைந்து வருடங்களாகப் பத்திரிகை நடத்துகிறார்கள்.

விளம்பரதாரர்கள் இல்லாமல் பத்திரிகை நடத்துவது சாத்தியமானது தானா? கேட்டால், ''நாங்கள் தரமான விசயங்களை குழந்தைகளுக்குப் புரிகிற மாதிரியான எளிமையான மொழிநடையில் தருகிறோம். அதுமட்டுமல்லாமல் எங்களின் அறிவியல் இயக்கத்தில் ஆசிரியர்கள் பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களே பத்திரிகையை எடுத்துச் சென்று குழந்தைகளிடம் சேர்த்து விடுகிறார்கள். இதுவரை எந்தக் கடையிலும் துளிர் பத்திரிகை விற்பனைக்காகத் தொடங்கியதில்லை'' என்கிறார் துளிர் பத்திரிகையின் பதிப்பாளரும் அறிவியல் இயக்கத்தின் மாநில உதவித் தலைவருமான சி. மகாலிங்கம்.

வெறும் விஞ்ஞான விசயங்கள் மட்டும் துளிர் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதில்லை. சமூகம் சார்ந்த வரலாற்றையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு மலர்களை வெளியிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக பூகம்பம் வந்த சமயத்தில் பூகம்பம் பற்றிய அனைத்துத் தகவல்களும் வரும் வகையில் சிறப்பு மலர் வெளியிட்டிருக்கிறார்கள். அதே மாதிரி மழைக்காலத்தில், மழை எப்படி உருவாகிறது? மழைநீரை எப்படிச் சேகரிப்பது? மழைக் காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்வது? போன்ற வகைகளில் குழந்தைகளுக்கு மழை பற்றிய விசயங்களை எடுத்துச் செல்லும் விதமாகச் சிறப்பு மலர்களைத் தயாரிக்கிறார்கள்.

சில நேரங்களில் போர் பற்றிய விவரங்களையெல்லாம் தொகுத்து வெளியிட்டு குழந்தைகளின் வரலாற்று அறிவை வளர்க்கவும் வழி செய்கிறார்கள். தாங்கள் எழுதுகிற விசயம் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகப் புரிய வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்கள். அந்தப் பட்டறையில் குழந்தைகளுக்குப் புரிகிற வகையில் எப்படி எழுதுவது? என்ன எழுதுவது போன்ற விசயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள்.

துளிர் பத்திரிகையைக் கொண்டு வரும் அறிவியல் கழகம் 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரளாவில் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரள அறிவியல் இயக்கத்தை முன்னோடியாகக் கொண்டே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தில் அனைத்துத் துறை வல்லுநர்களும் கை கோர்த்திருக்கிறார்கள். இது ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம். இந்த தொண்டு நிறுவனமே துளிர் பத்திரிகைக்கு வேண்டிய நிதியுதவிகளைப் பின்னணியில் நின்று செய்து தருகிறது.

''இப்படி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பாக ஒரு பத்திரிகையை 15 வருடங்கள் தொடர்ந்து நடத்தியது என்பதே மிகப் பெரிய சாதனை தான். துளிர் பத்திரிகையின் விற்பனையைப் பொறுத்தவரை நாங்கள் அறிவொளி இயக்கத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்த போது நாற்பதாயிரம் பிரதிகள் வரை போனது. இப்போது 15,000 பிரதிகள் விற்பனையாகின்றன. தமிழகத்தில் 30 நூலகங்களில் துளிர் பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கி எங்களை ஊக்குவித்து வருகிறார்கள்'' என்கிறார் சி. மகாலிங்கம்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் துளிர் பத்திரிகைக்கு முகவர்கள் இருக்கிறார்கள். துளிர் பத்திரிகை மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் 'Jantar Mantar' என்ற பத்திரிகையை இரு மாதத்திற்கு ஒரு முறையும், முழுக்க முழுக்க ஆசிரியர்களுக்கான 'விழுது' பத்திரிகையை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் நடத்தி வருகின்றனர். அறிவொளி இயக்கத்தின் மூலமாகக் கல்வி கற்று வருபவர்களுக்கான 'அறிவுத் தென்றல்' என்ற பத்திரிகையையும் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான 'விஞ்ஞானச் சிறகள்' என்ற பத்திரிகையையும் நடத்தி வருவது கூடுதல் சிறப்பு.

'துளிர்' பத்திரிகையின் ஆசிரியராகத் தற்போது ஆர். ராமானுஜன் பணியாற்றி வருகிறார். இவர் கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார்.

முழுக்க முழுக்க குழந்தைகளின் அறிவினை விஸ்தரிக்க வேண்டுமென்கிற நோக்கத்தோடு சமூக அறிவியல் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கும் துளிர் பத்திரிகையின் விலை? வெறும் ஆறே ரூபாய் தான் என்பது ஆச்சர்யத்தை உண்டுபண்ணுகிறது. துளிர் பத்திரிகையை http://www.intamm.com/thulir என்ற முகவரியில் இணையத்திலும் பார்வையிடலாம். அச்சுப் பத்திரிகையை வாங்க விரும்புவர்களுக்கு ஆயுள் சந்தா ரூ.70. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான ஆண்டுச் சந்தா 20$ மட்டுமே!

தங்களுடைய குழந்தைகளின் வளர்ச்சியில் முழு அக்கறை கொண்டு செயல்படும் பெற்றோர்கள் இந்த வருட தீபாவளிப் பரிசாய் தங்கள் குழந்தைகளுக்கு துளிர் பத்திரிகையை வாங்கித் தரலாம்.

பத்திரிகையை வாங்க விரும்புபவர்கள் சந்தா தொகையை,

துளிர் நிர்வாக அலுவலகம்,
ஏ - 5, பாரதியார் பல்கலைக் கழகக் குடியிருப்பு,
கோவை - 641 046

என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

******


துளிர் இதழில் இடம்பெற்றுள்ள கேள்வி - பதில் பகுதியிலிருந்து

யுரேகா பதில்கள்

மனிதன் கண்ணீர் விட்டு அழும் போது மூக்கில் தண்ணீர் வரக் காரணம் என்ன? - எஸ். சாந்தி, கடலூர்.

இயல்பான நேரங்களில் கண்களில் சுரக்கும் கண்ணீர், இமை விளிம்புகளில் உள்ள நுண்துளைகளின் வழியே கண்ணைவிட்டு நீங்கி கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையில் உள்ள கண்ணீர்ப்பையை அடைந்து, அங்கிருந்து தனிக்குழல் வழியாக மூக்கின் மேல்பகுதியில் சென்று வடிகிறது. இயல்பான நிலைகளில் அளவான நீரே சுரக்கப்படுவதால், அது மூக்குக்குழியை அடைவதற்குள் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. ஆனால் அழும்போது அதிகமான அளவு கண்ணீர் பெருக்கம் ஏற்படுவதால், தேவை போக அதிகப்படியான நீர் மூக்கிலிருந்து வழிகிறது. இதுவே மனிதன் கண்ணீர் விட்டு அழும் போது மூக்கில் தண்ணீர் வரவுக்கு காரணமாகிறது.

பப்பாளி, அரசி போன்ற செடிகளில் பால் போன்ற திரவம் சுரப்பதேன்? - என். சுப்பிரமணி, மெய்யூர்.

தாவரங்களில் சுரக்கும் பால் போன்ற திரவம் ஒருவித கழிவுப்பொருளே ஆகும். ஆல், அரசு, பலா, ரப்பர், அரளி, எருக்கு, கள்ளி போன்ற தாவரங்களில் செல் சுவர்கள் சிதைவடைந்து உண்டாகும் முக்கிய பொருள்களில் பால் போன்ற திரவமான 'லேட்டக்ஸ்' ஒன்றாகும். இவ்வகையான பால் போன்ற பொருள்கள் கேம்பியம் திசுக்களுக்கும் மரப்பட்டைகளுக்கும் இடையே அமைந்துள்ளன. மரப்பட்டைகளை வெட்டும்போது லேட்டக்ஸ் பாலாக வெளிவருகிறது. மேலும் இத்தாவரங்களில், நீராவிப்போக்கை தவிர்க்கவும், நீரை தக்க வைத்துக் கொள்ளவும், பால் போன்ற திட திரவமாக லேட்டக்ஸாக மாறி இருப்பதும் ஒருவித தகவமைப்பே ஆகும்.

பாலில் எலுமிச்சைப் பழச்சாற்றை ஊற்றினால் பால் திரிந்து விடுவதேன்? - செ. வேதகிரி, தஞ்சை.

பால் ஒரு கொலாய்டு திரவம். கொழுப்புப் பொருள்கள் சிறு சிறு துண்டுகளாக நீரில் கரையக்கூடியதாக உள்ள பால்ம வகையைச் சார்ந்த திரவம். எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. கொலாய்டு திரவமான பாலிரல் எலக்டோலைட்டுகளை (அயணிகளை) சேர்க்கும் போது அதன் நிலைப்புத் தன்மை கெடுகிறது. கொலாய்டு - கூழ்ம மூலக் கூறுகளின் மின்னேற்றத்தை, சேர்க்கப்பட்ட எலக்டோலைட்டுகளின் மின்னேற்றம் பாதிக்கும் போது கொலாய்டு திரிகிறது. இதன் காரணமாகவே எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் போன்ற பொருள்கள் பாலில் கலக்கும் போது பால் திரிகிறது.

பச்சைத் தாவரங்கள் மின்சாரத்தைக் கடத்துவதும் காய்ந்த மரப்பலகை மின்சாரத்தை கடக்காததும் என்ன காரணம்? - எம்.சுந்தர், விழுப்புரம்.

பச்சைத் தாவரங்கள் என்பது உயிருள்ள செயல்படுகின்ற செல்கள் கொண்டுள்ளன. அதன் செல் சைட்டோபிளாசம் எல்லாவிதமான கரைபொருள்களும் உள்ளன. அதன் செல் சைட்டோபிளாசம் எல்லாவிதமான கரைபொருள்களும் உள்ளன. 90% நீரும் உள்ளது. இந்த உயிர்த்தன்மைகளால் பச்சைத் தாவரங்கள் மின்சாரத்தைக் கடத்துகிறது. ஆனால் காய்ந்த மரப்பலகைகளில் உள்ள அனைத்து செல்களும் செயல்படாத இறந்த செல்களாகும். இதனால் அவை மின்சாரத்தை கடத்த இயலாது.

கண்ணீர் சுரப்பியல் கண்ணீர் எவ்வாறு உருவாகிறது? வெளியேறுகிறது? - எல். வெங்கட்ராமன், பெரும்பாக்கம்.

மண்ணில் உள்ள கார்னியா மற்றும் விழி வெண்படலத்தை எப்போதும் ஈரத்தன்மையுடன் வைத்திருக்க கண்ணீர் சுரப்பியில் இருந்து கண்ணீர் சுரக்கப்பட்டு இமைக்கப்படும்போது கண்ணின் மேற்பரப்பில் பரவு விரவுகிறது. கண்ணீர் குளுகோஸ், தாது உப்புகள், புரதங்கள், லைசோசைம் என்ற ஆன்டி பாக்டீரியல் நொதி போன்ற பொருள்களின் கூட்டுறவில் உருவாகின்றது. கண்ணீர் சுரப்பியால் உருவாக்கப்படும் இக்கண்ணின் நரம்புத் தூண்டல்களால் வெளியாகிறது. ஏறத்தாழப் பன்னிரண்டு சிறு நாளங்கள் இச்சுரப்பியின் சுரப்பைச் சேகரித்து, மேல் இமையின் உள்பக்கத்திலிருந்து வெளியேற்றுகிறது.

புதிய அசிரியினை வடித்தால் கூழாகப் போகிறதே என்ன காரணம்? - செ. அமுதாவுக்கு, கடப்பேரி

புதிய அரிசியினை வடித்தால் - கூழாகும் தன்மை காணப்படுவதற்குக் காரணம் அதில் X-அமைலேஸ் என்ற நொதிப் பொருள் நிறைந்த காணப்படுவதே ஆகும்.

சரவணன்

© TamilOnline.com