FETNA அமைப்பாளர்கள் பேசுகின்றனர்
மன்ஹாட்டன் சென்டர், நியூ யார்க். அதிநவீனத் தொழில்நுட்பம் கொண்ட கண்கவர் அரங்கம். சோனி தியேட்டர் தமது தயாரிப்புகளுக்கு விரும்பித் தேர்ந்தெடுக்கும் இடம். இங்கேதான் நடைபெறப் போகிறது அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 19-வது வருடாந்திரக் கொண்டாட்டம்.

2006 ஜூலை 1 முதல் 3 வரை நடைபெற இருக்கும் இந்த 'நியூ யார்க்கில் தமிழர் திருவிழா'வை முன்னெப்போதுமில்லாத மகத்துவத்துடன் நடத்த உழைத்து வருகிறது நிர்வாகக் குழுவும், 20 உப குழுக்களும். "இந்த ஆண்டின் விழாவில் அப்படி என்ன சிறப்பு?" என்று அதன் பல நிலைகளிலும் பணியாற்றும் சிலரைக் கேட்டோம். இதோ அவர்கள் தந்த பதில்கள்:

"மன்ஹாட்டனில் நடத்துவது இதுதான் முதன்முறை. வருகிறவர்கள் விசேஷமான 'நியூ யார்க் அனுபவத்'தைப் பெறுவதோடு உல்லாசமான பல நிகழ்ச்சிகளையும் ரசிப்பார்கள்" என்றார் டாக்டர். M.N. கிருஷ்ணன். விழா அரங்கம் ஒன்றிற்குத் தலைமை ஏற்கிறார் இவர்.

மாநாட்டுத் தலைவர் நடராஜன் ரத்தினத் தின் குரலில் மிகுந்த உற்சாகம். அவர் சொன்னார்: "இதை மன்ஹாட்டனில் நடத்தி, வட அமெரிக்கத் தமிழர்களின் வாழ்நாளில் ஒரு சரித்திரம் படைக்க விரும்பினோம். பிராட்வே தயாரிப்பு களைப்போல இதைத் தொழில்முறைத் தயாரிப்பாளர்களை வைத்து ஒரு பிரசித்தி பெற்ற அரங்கில் நடத்துகிறோம். தமிழ் கிராமியக் கலை இதன் மையக் கருத்தாக இருக்கும். தமிழர்களை இணைப்பதோடு, தமிழரல்லாதவர் நடுவில் நமது மொழியின் அழகையும் கலாசாரத்தையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். முந்தைய ஆண்டுகளைவிட அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். தமிழ்ச்சமூகம் ஆதரிக்கும் என நம்புகிறோம். இதில் லாபம் வருமேயானால் தமிழ் நாட்டின் ஊனமுற்ற குழந்தைகள் நலனுக்கு அதை அளிப்போம். எல்லா அமெரிக்க மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் பங்குகொள்வார்கள் என ஆவலோடு எதிர்பார்க்கிறோம்." "வணிகத் துறையின் ஆதரவைப் பெறு வதில் இது ஒரு மைல்கல்லாக இருக்கும்" என்கிறார் ராதாகிருஷ்ணன் (நிர்வாக உபதலைவர்). "நீண்டநாள் உறவுகளை நாங்கள் சில குழுமங்களோடு ஏற்படுத்திக் கொள்வோம். இதனால் தமிழ்ச்சங்கங்களும் பயன்பெறும்.

"எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஒன்று சேர்ந்தால் நாம் ஒரு பெரும் சக்தியாக அமெரிக்க மண்ணில் உருப்பெறலாம்" என்று உறுதியாகச் சொல்கிறார் ராதா கிருஷ்ணன்.

செயலாளர் ஆல்பர்ட் செல்லதுரையின் பார்வை வித்தியாசமானது. "நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டுவருவதன் மூலம் நமது பாரம்பரியக் கலைகளை வளர்க் கிறோம். நியூ யார்க்கில் நடத்துவதன் மூலம் மற்ற மாநிலத் தமிழர்களுக்கு இங்கிருக்கும் வானுயர் கட்டடங்களைக் கண்டு மகிழ வாய்ப்பளிக்கிறோம். அதோடு, 9/11 பகுதிகளைப் பார்ப்பதால் வாழ்க்கையின் யதார்த்தைப் புரிந்துகொண்டு சமுதாய ஒற்றுமை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. 43 மாநிலங்களில் இருந்தும் பிரதிநதிகள் வந்தால் நம் மாநாடு எவ்வளவு சிறப்புற அமையும்!"

"அமெரிக்கா என்றால் நியூ யார்க்" என்கிறார் வனஜா பார்த்தசாரதி, இணைச் செயலாளர். "ஜூலை 4-ல் முடியும் வாரத்தில் மாநாடு நடக்கிறது. இதைவிடப் பெரிய வாய்ப்பு எது? இது வாழ்நாளிலேயே மறக்கமுடியாததாக அமையப்போகிறது."

நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், மாநாட்டுப் பொருளாளருமான காஞ்சனா பூலா, "முதன்முறையாக ஒரு தமிழ்ச் சங்கத்தின் தலைமையில் பெண்மணி இருக்கையில் அந்தச் சங்கம் மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்துகிறது" என்று சொல்லும்போது நியாயமான பெருமை தொனிக்கிறது அவர் குரலில். "கலைஞர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும், பிற தமிழ்ச் சங்கங்கள் பங்கேற்க வேண்டும் என்பவற்றில் நாங்கள் குறிப்பாக இருந்தோம். இளம் தொழில்முனைவோரை இதில் அதிகம் ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்கால மாநாடு களை நடத்துவதில் அவர்களது ஆர்வத்தை வளர்க்கிறோம்."

இளைஞர் செயற்குழுவின் தலைவரான P. தயாநிதி மாநாட்டுக்கு 20-25 வயதுள்ளவர் கள் சுமார் 250 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார். "இளையோருக்கும் பெரியோருக்கும் இடையே இருக்கும் பொதுத்தன்மைகளை அடையாளம் கண்டு, வித்தியாசங்களை அகற்றி, திருமணம் போன்றவற்றில் ஒருமித்த மனத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்" என்கிறார் அவர்.

விழா மலர்க் குழுவின் தலைவரான அருள் வீரப்பன் "பிரபல எழுத்தாளர்கள், கவிஞர் கள் ஆகியோரின் கட்டுரை கவிதைகளால் நிரம்பியிருக்கிறது விழா மலர். வணிக துறையில் இருக்கும் என். வேணுகோபால் விளம்பரங்கள் சேகரிக்கிறார்" என்கிறார்.

தொடரும் மருத்துவக் கல்வி அரங்கிற்குத் தலைமை ஏற்கிறார் டாக்டர் சந்திரமோஹன். "தெற்காசிரியர்களின் உடல்நலம்பற்றிய விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்து வோம். சுமார் 100 மருத்துவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பல பிரபல இந்திய டாக்டர்கள் பேசுகிறார்கள். தெற்காசியாவில் இருக்கும் நோய்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றைக் குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன். அப்போதுதான் அங்கே போகும்போது நாம் அவற்றுக்குத் தயாராக இருக்கமுடியும்" என்று அவர் கூறினார்.

"பேரவையோடு நெருங்கிய உறவைத் தமிழ்ச்சங்கங்கள் ஏற்படுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு" என்பது டாக்டர் P. சுந்தரத்தின் கருத்து. இவர் கனெக்டிகட் தமிழ்ச் சங்கத் தலைவர். "மாநாட்டு ஏற்பாடுகள் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது" என்கிறார் இவர்.

கனெக்டிகட் தமிழ்ச் சங்க உறுப்பினரான டாக்டர் A.தண்டபாணி மாநாட்டின் மேடைக் குழுவில் இருக்கிறார். "நாலு நாட்கள் குடும்பத்தோடு மன்ஹாட்டனில் விடுமுறை, அபாரமான முன்னேற்பாடுகள்--இடம், நிகழ்ச்சிகள், நிதி ஒதுக்கீடு எல்லாமே. அனைவரும் ஈடுபட்டு உழைக்கிறார்கள். வேறென்ன வேண்டும்?" என்கிறார் ரத்தினச் சுருக்கமாக.

எல்லாக் கமிட்டிகளுமே உயிரைக் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கின்றன. வெற்றி நிச்சயம் என்கிறார்கள். இப்படிப் பட்ட அரங்கம், நிகழ்ச்சிநிரல், மற்றும் கலைஞர் அறிஞர் பங்கேற்பு இருந்தால் வெற்றிக்குக் கேட்கவேண்டுமா! எதிர் பார்ப்புகளும் உச்சத்தில்தான்.

முதலில் வருகை தாருங்கள் www.fetna2006.org வலைதளத்துக்கு. பிறகு, வேறெங்கே, மன்ஹாட்டனுக்குத்தான்.

ஆங்கில மூலம்: சித்ரா வைத்தீஸ்வரன்
தமிழில்: மதுரபாரதி

"வெளிநாட்டிலிருந்தும் , தமிழ் நாட்டி லிருந்தும் மற்றும் பல இடங்களிலிருந்தும் கலைஞர்களையும், பேச்சாளர்களையும் கொண்டு வருவதற்கு இதுபோல் ஒரு அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இருந்தால்தான் முடியும். தனியாக எந்த ஒரு தமிழ்ச் சங்கமும் இவ்வளவு பேரைக் கூட்டவும் முடியாது, இவ்வளவு பொருள் செலவைச் செய்யவும் முடியாது. சுமார் 2000 பேர்கள் இந்த ஆண்டு விழாவிற்கு வருகின்றார்கள்" என்று கூறினார் டாக்டர் தனிக்குமார் சேரன். இவர் பேரவையின் முன்னள் தலைவரும், பேரவைச் சட்டதிட்டக் குழுவின் தலைவரும் ஆவார். பேரவைக் கான சட்டதிட்டங்களை வரைவு செய்து கொடுத்திருக்கிறார்." தொலைபேசியில் கருத்து அறிந்தவர் தில்லை குமரன், தலைவர், வளைகுடா தமிழ் மன்றம்

சி.கே. வெங்கட்ராமன்.

தெரிந்துகொள்ளுங்கள்

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 1988-ல் தொடங்கப்பட்டது. இது வட அமெரிக்காவின் பல்வேறு பகுதி களில் இருக்கும் தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து உருவாக்கிய ஒட்டு மொத்தப் பேரவை.

பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்று பர்க்கிலிப் பல்கலையில் தமிழ்ப் பீடம் அமைக்க உறுதுணை யாக இருந்தது.

தமிழைச் செம்மொழியாக அறிவிக் கத் தொடர்ந்து முயற்சிகள் எடுத்தது. இதற்காக யுனெஸ்கோ, இந்திய அரசு, தமிழ்நாடு அரசு ஆகியோருக் குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தது.

தமிழ்ச் சான்றோருக்கு விருதுகள் கொடுக்கிறது.

இந்த ஆண்டின் தமிழர் திருவிழா இதுவரை நடந்த எல்லாவற்றையும் விட மிகப் பிரம்மாண்டமானது. சுமார் 2000 பேர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

© TamilOnline.com