அப்பாவின் முடி
அப்பாவின் புத்தகத்தில்
அறுபத்தேழாம் பக்கத்தில்
ஒட்டிக் கிடக்குது
ஒற்றை முடி.

அவர் எரிந்து
ஆறு வருஷமாச்சு.

புருவத்திலிருந்தோ,
இமைகளிலிருந்தோ
(அவருக்கு மீசை இருந்ததில்லை)
எப்படி விழுந்ததோ
இதுமட்டும் இன்னும்
பத்திரமாய்...

நான் வைத்த கொள்ளிக்குத் தப்பி.

அப்பாவின் புத்தகத்தில்
அறுபத்தேழாம் பக்கத்தில்
ஒட்டிக் கிடக்குது
ஒற்றை முடி.

வளைந்த வில்லினைப்போல்.
தூக்கிய தேளின் கொடுக்கைப் போல்..

எண்ணம் அறுந்து என்மனமோ
இறுகும் என்னை அறுவருக்கும்.

அப்பாவை நினைத்தால்
வில்லும் தேளுமா நெஞ்சில் வரும்?

அன்பான அப்பனிலும்
ஆத்திரம்தான் எஞ்சிடுமா?

வடுதடவும் விரல்போல - என்
மனம்தடவும் ஒற்றை முடி.
அறுபத்தேழாம் பக்கத்தில்

(ஓர் அதிகாலைக் கனவில் அப்பாவைப் பார்த்து திடுக்கிட்டு விழித்தபோது)

கவிஞர் ஹரிகிருஷ்ணன்

© TamilOnline.com