ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமம் பிரியங்கா ரவிச்சந்திரன் நாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 4, 2007 அன்று ப்ரியங்கா ரவிச்சந்திரனின் நாட்டிய அரங்கேற்றம் பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் நிகழ்ந்தேறியது. இவர் 9 ஆண்டுகளாக குரு விஷால் ரமணி அவர்களிடம் நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறார். முதலில் குருவந்தனை, நடராஜர் ஆகியோருக்குப் புஷ்பாஞ்சலி செய்தார்.

அவரது நடனத்தில் லயத்தையும், அங்க சுத்தியையும் முழுமையாகப் புரிந்து கொண்டு வெளிப்படுத்தியது தெளிவானது.

அவரது ஜதிஸ்வரங்களில் ஒருவித சிக்கலான நுட்பமான தாளகதி வெளிப்பட்டது. ஹம்சாநந்தி ராக ஜதிஸ்வரம் சதுஸ்ர மத்ய காலத்தில் அமைந்திருந்தது. அதற்கு ஆடிய நாட்டியத்தில் அவரது கால்களின் தீர்மானம், நுட்பமான அசைவுகள், நளினம் அனைத்தும் வெளிப்பட்டன. மிகவும் சிறப்பான வர்ணங்களை அவர் தேர்ந்தெடுத்தது அவரது ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டின. வர்ணங்களை மிகுந்த முதிர்ச்சியுடன் அவர் கையாண்டார்.

முருகனிடம் சேர வேண்டிப் பாடும் நாயகி பாவப் பாடலின் வரிகளுக்கு அவர் முகத்தில் காண்பித்த அப்பாவித்தனம், ஏக்கம், தாபம் ஆகிய பாவங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ஓர் அனுபவம் வாய்ந்த நாட்டியக் கலைஞரைப் போல மிக அற்புதமாகச் சித்திரித்தார். பூர்வி கல்யாணி ராகத்தில் அமைந்த வர்ணம், ஜீவாத்மா பரமாத்வாவைத் தேடி இணைய ஏங்கும் பாவத்தைக் கொண்டது. நாயகியின் மீது மன்மதன் தன் பாணத்தை விடும் கனவுக் காட்சியில் சிருங்கார ரசத்தை மிக நேர்த்தியாக ப்ரியங்கா வெளிப்படுத்தியிருந்தார். பாடலின் இடையே அமைந்திருந்த தீர்மானங்களுக்கு அவர் நளினம், வேகம், தாளம் ஆகியவை ஒத்திசைய ஆடியது வெகு சிறப்பு.

நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'ஸ்வாகதம் கிருஷ்ணா' என்னும் மோகன ராகப் பாடலுக்கு ஆடினார். அடுத்து, கேதார கௌளையில் அமைந்த சிவ நடனத்தை மேடையில் மிக தத்ரூபமாகக் கொணர்ந்தது பரவசமூட்டியது. காவடிச் சிந்தான 'மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம்' என்று தாய் யசோதா கண்ணனைக் கெஞ்சும் பாடல் பலத்த வரவேற்பைப் பெற்றது. தன் கவலைகளை ஒவ்வொன்றாக யசோதா கண்ணனிடம் சொல்லிப் போக வேண்டாம் என்று கெஞ்ச அதற்குக் கண்ணன் ஒவ்வொன்றாக சமாளிப்புப் பதில்களைச் சொல்கிறான். இதில் யசோதாவாகவும் கண்ணனாகவும் மாறிமாறி அச்சம், வீரம், கெஞ்சல், துடுக்கு போன்ற பல பாவங்களை ப்ரியங்கா மேடையில் அநாயாசமாகக் கொணர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.

பின்னால் பாடிய முரளி பார்த்தசாரதிக்கு அற்புதமான குரல் வளம். மதுரை ஆர். முரளிதரன் (நட்டுவாங்கம்), தனம்ஜெயன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்) ஆகியோர் நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டினர்.

ச. திருமலைராஜன், ·ப்ரிமாண்ட் (கலி.)

© TamilOnline.com