செப்டம்பர் 2007: வாசகர் கடிதம்
'தென்றல்' இதழ் பார்த்தோம். பரவசமடைந்தோம். பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க மண்ணில் வெளி யாகும் தமிழ்ப் பத்திரிகை மனதுக்கு மிகவும் மகிழ்வு தந்தது. அதுவும் தமிழ்ப் பற்று மிக்க எங்களைப் போன்றவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தரமான இதழ். தமிழகத்தில் வெளி வரும் சில முன்னணி இதழ்களுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. 'தென்றல்' இதழைப் பார்த்தவுடன் பெருமிதம் தோன்றுகிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பெருமையில் தலைநிமிர முடியும்.

பழ. முருகப்பன், சாக்ரமண்டோ, கலிபோர்னியா

*****


தென்றல் இணைய இதழின் (tamilonline.com/thendral) புதிய வாசகன் நான். தொடர்ந்து தமிழ் ஆன்லைன் இணைய தளத்தை நேரம் கிடைத்த போதெல்லாம் பார்த்து, படித்து நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உள்ளேன். 'வலி' சிறுகதை அருமை.

தமிழ்வேந்தன்

*****


தெ. மதுசூதனன் அவர்களின் சிவாஜி கணேசன் பற்றிய கட்டுரை அருமையாக இருந்தது. நடிப்பு என்றால் அந்தந்தக் காலகட்டத்துக்குத் தகுந்தாற்போல இருந்திருக் கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத எவரும் ஒரு மாபெரும் நடிகனை விமர்சிக்கத் தகுதி இல்லாதவர்களே. கேமராவின் முன் இயல்பாக அழத் தெரியாதவன் நடிகனே அல்ல. அவன் அழும்போது நமது தொண்டையில் துக்கம் அடைக்க வேண்டும். அப்படிப்பட்ட நடிகர்களில் முதன்மையானவன் அந்த மாமேதை. இன்றுள்ள நடிகர்களில் சிலரை மட்டுமே அப்படிப் பார்க்க முடியும். அப்படிப்பட்ட நடிகர்கள் சிவாஜியை ஒரு பல்கலைக் கழகமாகத்தான் சொல்லுவார்கள். அவன் மாமேதை, நடிப்புலகச் சக்ரவர்த்தி என்பதை ஆணித் தரமாக நிரூபித்திருக்கிறார் மதுசூதனன். மொத்தத்தில் நாங்கள் ஒரு நடிகனைப் பார்க்கவில்லை. ஒரு தேச பக்தனை, கட்டபொம்மனை, வ.உ.சி.யை இன்னும் எத்தனையோ சுதந்திர வேட்கையூட்டிய மாமனிதர்களை அவன் மூலமாகப் பார்க்கிறோம். இந்தக் கட்டுரை இன்றைய தலைமுறை படிக்க வேண்டிய கட்டுரை. தென்றலின் தரத்தை இதுவரை எவரும் தாண்டியதில்லை என்பது மீண்டும் தெளிவாகிறது.

இந்த உலகத்தில் கவலையில்லாதவர்கள் கைக்குழந்தைகளும், ஞானிகளும் மட்டுமே என்பார்கள். விரக்தியிலும் வேதனையிலும் இருக்கும் ஒரு வாசகிக்கு சித்ரா வைத்தீஸ்வரன் ஒன்பது வழி முறைகளை, ஒன்பது வேத வாக்குகளாகச் சொல்லியிருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அவருடைய தொகுப்பு ஏதாவது கிடைக்குமா? மேலும் ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாசகர்களுக்கு அவர் பதிலளித்தால் பல பேரை மன அழுத்தத்திலிருந்து காப்பாற்றிய புண்ணியம் தென்றலையும் சித்ரா வைத்தீஸ்வரனையும் சேரும்.

சென்னை- நவின், இர்வைன், (கலி.)

*****


தென்றல் பேசுகிறது என்கிற தலைப்பில் வரும் விஷயங்கள் மிகத் தேவைதான். பத்திரிகையின் தரத்தை உயர்த்துகிறது. 'வலி' வலிமை உள்ளதாக அமைந்துள்ளது. அல்வா செய்யும் விதத்தை படித்தாலே அல்வா சாப்பிடத் தூண்டுகிறது. இரவில் பூக்கும் பூ ஒரு அதிசயம் தான். தமிழ்ப் பேரணி பெரிய சேவை செய்திருக்கிறது. டாக்டர் சாந்தாவின் சிறப்புக் குறிப்புகள் மிகப் பயனுள்ளவை. ஸ்ரீமதி கரியாலியின் அனுபவம் சுவையாக உள்ளது. சிவாஜியின் ஸ்டில்கள் பிரமாதம். நமது முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ கலாம் இரண்டு சூட்கேசுடன் கிளம்பினார் என்பது அவருடைய எளிமையான வாழ்கையை உயர்த்திக் காட்டுகிறது. வரலட்சுமி நிரஞ்சனின் கட்டுரை மெச்சத் தகுந்தது. 'சம்பிரதாயங்கள்' சிறுகதை சிறப்பாக இருந்தது. 'இதோ பார், இந்தியா'வை மெச்சத்தான் வேண்டும். சிரிப்பு வராத ஜோக்குகளை போடுவதைக் காட்டிலும் சிரிப்பு உண்டாக்கும் இரண்டு, மூன்று ஜோக்குகளை போடலாமே. மொத்தத்தில் 'தென்றல்' புத்துயிர் பெற்று விளங்குகிறது.

அட்லாண்டா ராஜன்

© TamilOnline.com