தண்டிக்க அதிகாரம் யாருக்கு
ரிக்ஷா இழுக்கும் சலீமுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் ஏற்பட வேண்டாம். இது நடந்தது பீஹாரில். ஒரு பெண்மணி தனது தங்கச் சங்கிலியை சலீம் பறித்துக் கொண்டதாகச் சொல்லவே ஊர்க்காரர்கள் எல்லோரும் கூடி அவரை தடி, இரும்புக் கம்பி உட்படப் பலவற்றால் அடித்துத் தீர்த்துவிட்டனர். அங்கே வந்த போலீஸ்காரர்கள் இருவர் இதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவில்லை. அவர்கள் செய்தது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. போலீஸ் மோட்டார் சைக்கிளின் பின்னால் சலீமைக் கட்டி அதை 5 கி.மீ. தூரம்வரை ஓட்டிச் சென்றிருக்கிறார்கள். முதலிலேயே உதை வாங்கிக் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த சலீம் இதில் முற்றும் அபாயநிலையைத் தொட்டுவிட்டார். இதை எழுதும்போது சலீம் ஓர் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த வன்முறை முழுவதையும் விடியோ படமாகப் பிடித்து டி.வி. சானல்கள் காண்பித்துவிடவே பொதுமக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். பீஹார் அரசு மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. சலீம் குற்றவாளியாகவே இருக்கலாம், ஆனால் அவரை இப்படி நடத்த ஒரு கும்பலுக்கோ, போலீஸ்காரர்களுக்கோ என்ன அதிகாரம் இருக்கிறது?

அரவிந்த்

© TamilOnline.com