இயல் விருது தமிழுக்கென முயலுனர்: ஜார்ஜ் ஹார்ட்
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி மாலை டொராண்டோ பல்கலைக் கழக வளாகத்தில் தமிழ் இலக்கியத் தோட்டம் என்றஅமைப்பு கலிபோர்னியா - பெர்க்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுக்கு 2005- ஆண்டுக்கான 'இயல் விருது' பரிசைக் கொடுத்து அவரைக் கௌரவித்தது.

2001- இல் தமிழ் ஆர்வலர்களால் ஆரம்பிக்கப் பட்ட இலக்கியத் தோட்டம் , முந்தைய ஆண்டுகளில் சுந்தர ராமசாமி , வெங்கட் சுவாமிநாதன் போன்றவர்க்கு இந்த விருதை வழங்கியுள்ளது.

இவ்வாண்டு இயல் விருது விழாவில் பேசிய யாவரும் ஹார்ட்டும், அவர் துணைவியார் கௌசல்யாவும் தமிழுக்குச் செய்துவரும் சேவைகளைப் பற்றியும், முக்கியமாக இந்தியாவில் தமிழைச் செம்மொழியாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள ஹார்ட் செய்த உதவியைப் பற்றியும் குறிப்பிட்டுப் பாராட்டினர். அங்கங்கே சில இடங்களைத் தவிர, தன்னுடைய உரையைத் தமிழிலேயே வழங்கினார் ஹார்ட். செம்மொழி என்று தமிழைச் சொல்வது எவ்வளவு பொருத்த மானது என்று ஆர்வம் பொங்க விவரித்த ஹார்ட், மேற்கொண்டு சில புறநானூற்றுப் பாடல்களையும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் படித்தார். தற்போது எல்லா நாடுகளிலும் இருக்கும் போர்நிழலை மனத்தில் கொண்டு, புறநானூற்றில் வந்த 'நல்ல நாடு என்றால் என்ன? ("நாடா கொன்றோ?") போரை எப்படித் தவிர்ப்பது? ("வயலைக் கொடியின்")" போன்ற பாடல்களை அழகாகத் தொகுத்துப் பேசினார். அவர் கடைசியாகக் குறிப்பிட்ட பாடல் "பிறர்க்கென வாழும் பெருமை"யைப் பற்றிக் 'கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி' பாடிய "உண்டால் அம்ம" என்று தொடங்கும் பாடல்.

அதைக் கேட்ட எனக்கு, அதில் வரும் இறுதி அடிகளை"... அயர்விலர் அன்ன மாட்சி அனையர் ஆகித்தமக்கென முயலா நோன்தாள் தமிழ்க்கென முயலுநர் உண்மை யானே " என்று சிறிது மாற்றி, 'அயர்வின்றி உழைத்து, அருங்குணங்கள் கொண்டு, தமக்கென எதுவும் செய்யாது, தமிழுக்கு உழைக்கும் ஹார்ட் போன்றவர்களாலேயே இவ்வுலகம் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக் கிறது' என்று சொல்லத் தோன்றியது.

பேராசிரியர் பசுபதி,
டொராண்டோ பல்கலைக் கழகம்

© TamilOnline.com